search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும்- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
    X

    100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும்- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

    கட்சியும் ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan

    கொடைரோடு:

    நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதி இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க சார்பாக அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மைய நாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் வரவேற்றார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பூத் கமிட்டி முகவர்களை ஒவ்வொருவராக சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என கோரினர். அதன் காரணமாக அந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவும் நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கட்சியும் ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது.

    தற்போது முதல்- அமைச்சர், துணை முதல் -அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகின்றனர்.

    ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.கவின் தொண்டர்களை தற்போது சந்திப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு கூட்டங்களில் பார்த்து இருப்போம், ஆனால் நேரில் ஒவ்வொரு நபர்களையும் குடும்பத்தினரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிலக்கோட்டை தொகுதி எப்போது அ.தி.மு.கவின் கோட்டையாக இருக்கிறது. எப்போது இங்கு இடைத்தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.

    அ.தி.மு.க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் களப்பணி சிறப்பாக செய்ய வேண்டும். எதிர் கட்சியினர் என்ன குறைகளை சொல்லினாலும் மக்களுக்கு அது பொய் என தெரியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவைகளை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் குருவையா, குணசேகரன், சங்கையா, சேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dindigulsrinivasan

    Next Story
    ×