search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்
    X

    முத்துப்பேட்டை அருகே மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

    முத்துப்பேட்டை அருகே கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #gajacyclone #stormdamage #centralcommittee

    முத்துப்பேட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், மின்சாரம் இல்லாததால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து 11 நாட்களாகியும் அதிகாரிகள் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத விவரங்களை பார்வையிட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை, தொண்டியக்காடு பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், வீடுகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் கற்பகநாதர்குளம் கிராமத்திற்கு சென்றனர்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், மத்திய குழுவினர் வருவதை அறிந்து சாலையை நோக்கி வேகமாக வந்தனர். ஆனால் அதற்குள் மத்திய குழுவினர் சென்ற வாகனங்கள் மக்களை கடந்து சென்றது.

    இதனால் ஆவேசம் அடைந்து திடீரென மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் வினியோகம் இல்லாமல், இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கிராமத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்கு அதிகாரிகளும் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நாகூர்-திட்டச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சன்னமங்களம் காலனி தெரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

    மேலும் அதிகாரிகள் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர், மின்சாரம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் கஜா புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், வீடுகள் சேதமடைந்தன. அதை தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள 209 கிராமங்களில் கடந்த 11 நாட்களாக இருளில் மூழ்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்தந்த பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில இடங்களில் மட்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம். ஏர்வாடி, கோட்டப்பாடி, கிடாமங்கலம், இடையாத்தங்குடி, சே‌ஷமூலை, நம்பிகுடி,பரமநல்லூர், விச்சூர், குரும்பூர், மருதாவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எந்த அதிகாரியும் வரவில்லை என்றும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கணபதிபுரம் கடைத்தெருவில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் புயல் பாதித்த இடங்களுக்கு மின்சாரம் உடனே வழங்க கோரி நடுரோட்டில் பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களில் மின்சாரம் வரும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். #gajacyclone #stormdamage #centralcommittee

    Next Story
    ×