search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி செய்து மகன் தலைமறைவானதால் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை
    X

    பண மோசடி செய்து மகன் தலைமறைவானதால் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை

    அரசு வேலை வாங்கி தருவதாக இளைஞர்கள் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த மகனால் பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 45). கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் பலரிடம், தனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதனை நம்பி, இளைஞர்கள் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் பாபு பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தங்களுக்குரிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பாபு, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள், தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

    இதனிடையே பணத்தை கொடுத்து ஏமாந்த பலர், பாபுவின் பெற்றோர் கஸ்தூரி (வயது 60), கவுசல்யா (55) ஆகியோரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர். தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர்கள் மனமுடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கஸ்தூரி, கவுசல்யா இருவரும் தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாபுவிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண மோசடி செய்து தலைமறைவான பாபுவுக்கு ஷோபா என்ற மனைவி உள்ளார். தன்வந்த் என்ற 4 வயது மகனும் இருந்தான். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த போது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்றுப்பாலத்தில் மனைவி மற்றும் மகனுடன் சென்ற பாபு, அங்கு பாலத்தின் கைப்பிடி சுவர் அருகே மகனை தூக்கி வைத்து கொண்டு செல்போனில் செல்பி எடுத்தபோது, தன்வந்த் தவறி ஆற்றுக்குள் விழுந்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் பண மோசடி விவகாரத்தால் பாபுவின் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான பாபு எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    Next Story
    ×