search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் - தூத்துக்குடி முழுவதும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்
    X

    வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் - தூத்துக்குடி முழுவதும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

    வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் நாளை (26-ந்தேதி) அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (27-ந்தேதி) காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அன்றைய தினங்களில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேல் கூடுவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றால் முன்னதாகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி பெற வேண்டும். மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×