search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் போராட்டம் எதிரொலி - பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தொடங்கியது
    X

    மீனவர்கள் போராட்டம் எதிரொலி - பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தொடங்கியது

    பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி இன்று தொடங்குகிறது. தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். #Fishermen
    பொன்னேரி:

    பழவேற்காடு முகத்துவாரப் பகுதி தூர்வாரப்படாததால் மணல் திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பழவேற்காட்டை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். படகுகளில் சென்று முகத்துவாரத்தையும் முற்றுகையிட்டனர்.

    நேற்று மாலை மீனவ கிராம மக்கள் பழவேற்காடு பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழவேற்காடு முகத்துவாரம் தற்காலிகமாக உடனடியாக தூர்வாரப்படும், தூண்டில் விளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான மண் உறிஞ்சும் எந்திரம் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திலும், எண்ணூர் துறைமுகத்திலும் உள்ளது. அதனை வரவழைத்து தூர்வாரும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    முகத்துவாரத்தை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். #Fishermen

    Next Story
    ×