search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபினி அணையில் இருந்து மீண்டும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
    X

    கபினி அணையில் இருந்து மீண்டும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

    கபினி அணையில் இருந்து மீண்டும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர்அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பின்னர் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று காலை முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை அணைக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.35 அடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் மீண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3,272 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 56.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 56.91 அடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 3500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1800 கன அடியாக இருந்தது. நீர்வரத்து குறைந்தாலும் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.


    Next Story
    ×