search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை
    X

    விருதுநகர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை

    விருதுநகர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை நிறுவப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்ட சபையில் பால் வளத் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இரண்டு 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பான்கள், கிள்ளனூர் மற்றும் நார்த்தாமலை ஆகிய இடங்களில் நிறுவப்படும்.

    திருவண்ணாமலை பால்பண்ணை மற்றும் பால்பவுடர் தொழிற்சாலையின் கையாளும் திறனை உயர்த்த நவீன சவ்வூடு வடிகட்டும் தொழில் நுட்பத்திலான புதிய எந்திரம் நிறுவப்படும்.

    ஈரோடு ஒன்றியத்தில் 50 மி.லி., 100 மி.லி. மற்றும் 200 மி.லி. என்ற சிறிய அளவிலான சிப்பங்களில் நெய் நிரப்பும் நவீன தானியங்கி எந்திரம் நிறுவப்படும். 17 மாவட்ட ஒன்றியங்களில் மேற்கொள்ளப்படும் கால்நடை பராமரிப்பு சேவை பணிகளை ஒருங்கிணைக்க ஏதுவாக சிறப்பு செயலி மென்பொருள் உருவாக்கப்படும்.

    17 மாவட்ட ஒன்றியங்களிலுள்ள 34 பால் குளிரூட்டும் நிலையங்கள், 341 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 341 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களில், அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமரா நிறுவப்படும்.

    நீலகிரி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட துணை பதிவாளர்களுக்கு (பால்வளம்) புதிய இலகுரக வாகனம் வாங்கப்படும். இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் பொது நிலை அலுவலர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்.

    300 பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள், எந்த நேரமும் நுகர்வோர்களுக்கு கிடைக்கும் வகையில் பாட்டில் குளிர்விப்பான்கள் மற்றும் ஆழ்நிலை உறை குளிர்விப்பான்கள் வழங்கப்படும்.

    17 மாவட்ட ஒன்றியங்களை சார்ந்த 30 முன்னணி பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்ப முறைகளை தெரிந்துகொள்வதற்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    விழுப்புரம் ஒன்றியத்தில், குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்கும் வசதிகள் மற்றும் குளிர்பதன வசதிகளின் தரம் உயர்த்தப்படும். ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள பயன்படுத்தப்படாத நிலப்பரப்பில் பசுந்தீவன சாகுபடி செய்யப்படும். தர்மபுரி ஒன்றியத்தில் பால் பதப்படுத்தும் எந்திரம், புதிய குளிர்பதன அமைப்பு மற்றும் கொதிகலன் ஆகியவை நிறுவப்படும். 500 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் தானியங்கி பால் பரிசோதனை அலகுகள் வழங்கப்படும்.

    அம்பத்தூரிலுள்ள பால் உபபொருட்கள் பண்ணையில் பனீர், பால்பேடா, குல்பி மற்றும் ஐஸ்கிரீம் ஆகிய பால் உபபொருட்கள் பேக்கிங் செய்யும் தானியங்கி மற்றும் நவீன சிப்பங்கட்டும் எந்திரங்கள் நிறுவப்படும்.

    மேலும் அங்கு அதிக கொள்ளளவு கொண்ட கொதிகலன்கள், மின்மாற்றிகள், மின் உபகரணங்கள், குளிர்பதன சேமிப்பு வசதிகள் மற்றும் ஐஸ்கிரீம் உறைகலன்கள் அமைக்கப்படும். விருதுநகர் ஒன்றியத்தில் வெண்ணெய், நெய், பனீர் மற்றும் இந்திய வகை இனிப்புகள் தயாரிக்க ஏதுவாக பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். 
    Next Story
    ×