search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதா கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் சிறுமி பலி - 3 பேர் கைது
    X

    மாதா கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் சிறுமி பலி - 3 பேர் கைது

    ஆரம்பாக்கம் அருகே மாதா கோவில் விழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் சிறுமி பலியானார். இதுதொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் காலனியில் தூய லூர்து அன்னை தேவாலாயம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 27ந்தேதி இரவு திருவிழாவையொட்டி மாதா சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது ஒரு லோடு ஆட்டோவில் பட்டாசுகளை வைத்து அதனை சிலர் வெடித்துக்கொண்டே வந்தனர். அந்த லோடு ஆட்டோவில் சிறுவர்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர்.

    இந்த நிலையில், ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட ராக்கெட் வெடியானது. மேல்நோக்கிச்சென்றபோது மின்வயர் மீது பட்டு மீண்டும் திரும்பி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் விழுந்தது.

    ஆட்டோவில் இருந்த அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. சிறுவர்கள், கல்லூரி மாணவி என மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி (வயது 10) சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே போலீசாரின் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோராமல் விழா நடத்தப்பட்டதாக கிராம நிர்வாக அதிகாரி தசரதன் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ உரிமையாளரான தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தசரதன் , டிரைவர் அசோக் ஆகிய 2 பேரை கடந்த 28-ந் தேதி கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது மாதா கோவில் நிர்வாகிகளில் ஒருவரான முனுசாமி என்கிற ஜோசப் என்பவரை இன்று காலை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாதா கோவிலின் முதன்மை நிர்வாகியான அந்தோணி என்பவரை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×