search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் குருக்களிடம் டி.எஸ்.பி. கருணாகரன் விசாரணை நடத்தினார்.
    X
    கோவில் குருக்களிடம் டி.எஸ்.பி. கருணாகரன் விசாரணை நடத்தினார்.

    பழனியில் சிலை மோசடி - கோவில் குருக்களிடம் 2-ம் கட்ட விசாரணை

    பழனி கோவிலில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    பழனி:

    பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு நவபாஷாண சிலை சேதமடைந்ததாக கூறி புதிய சிலை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக திருத்தணி முருகன் கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் பெறப்பட்டு ஸ்தபதி முத்தையா தலைமையில் சிலை அமைப்பு குழுவினர் ஐம்பொன்னால் ஆன சிலையை உருவாக்கினர்.

    இந்த சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே கருவறையில் 2 சிலைகள் ஆகம விதிப்படி வைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த சிலை அகற்றப்பட்டது.

    221 கிலோ எடையில் 3½ அடி உயரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சிறிது நாட்களிலேயே நிறம் மாறத் தொடங்கியது. எனவே இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் ஐம்பொன் சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது உறுதியானது. இதனையடுத்து ஸ்தபதி முத்தையா மற்றும் அப் போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனியில் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

    வழக்கின் விசாரணை சுறுசுறுப்பாக நடந்து வந்த நிலையில் இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரே மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனையடுத்து 2-ம் கட்ட விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர். டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் பழனி கோவில் குருக்கள் தேவசேனாதிபதி என்ற சுகிசிவத்திடம் விசாரணை நடத்தினர். இவரது தந்தை கண்ணன் கடந்த 2004-ம் ஆண்டு ஐம்பொன் சிலை அமைக்கப்பட்ட காலத்தில் பழனி முருகன் கோவிலில் தலைமை குருக்களாக இருந்தவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். எனவே அவரது மகனான சுகிசிவத்திடம் சிலை தொடர்பான ஏதேனும் ஆவணங்கள், விபரங்கள் உள்ளதா? என கேட்டறிந்தனர். பழனி கோவில் சிலை மோசடி வழக்கை மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடங்கியுள்ளதால் வேறு யாரேனும் முக்கிய நபர்கள் சிக்குவார்களா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலை.



    Next Story
    ×