search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக-ஆந்திர மாநில அதிகாரிகள் ஆய்வு: தடுப்பணை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு
    X

    தமிழக-ஆந்திர மாநில அதிகாரிகள் ஆய்வு: தடுப்பணை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு

    புல்லூர் அருகே தடுப்பணை கட்டும் இடத்தை தமிழக, ஆந்திர மாநில அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தடுப்பணை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராம ஏரிக்கு ஆந்திர மாநிலம் புல்லூரில் பாயும் கொசஸ்தலை ஆற்று துணை நதியான குசா ஆற்றில் இருந்து வரவு கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது இந்த கால்வாய் மீது நிலவாய் என்ற இடத்தில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

    இதனால் தமிழகத்தை சேர்ந்த வெளியகரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி வெளியகரம், இருதலைவாரிப்பட்டடை, வெளியகரம் காலனி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆந்திரா, தமிழக மாநிலங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 15-ந்தேதி தடுப்பணை கட்டும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவு கால்வாயின் நீர்மட்டத்தை ஆய்வு செய்து தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டனர்.

    தடுப்பணை கட்டுவதை கைவிடக்கோரி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார்.

    இதனிடையே இரு மாநில அதிகாரிகள் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணி தலைமையில் தமிழக அதிகாரிகளும், ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நாகபூஷணம், வெங்கடசிவா ரெட்டி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

    இரு மாநில அதிகாரிகளும் ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் இருந்து வரவு கால்வாயின் நீர்மட்டத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இரு மாநில அதிகாரிகளும் தங்கள் அரசுகளுக்கு ஆய்வு அறிக்கையை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

    இரு மாநில அரசுகளும் கலந்து பேசி தெரிவித்த பிறகே வெளியகரம் ஏரி வரவு கால்வாய் மீது தடுப்பணை கட்டுவதா? வேண்டாமா? என முடிவு செய்யப்படும், அதுவரை தடுப்பணை கட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க.வினர் பள்ளிப்பட்டு காந்தி சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ரவி, பொதட்டூர்பேட்டை நகர செயலாளர் நல்லாண் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வரும் இடத்தை அரக்கோணம் எம்.பி. கோ.அரி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், தடுப்பணை விவகாரம் சுமுகமாக முடியும் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் சார்பாக பாராளுமன்ற கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். ஆந்திர முதல்-மந்திரியுடன், பிரதமர் பேசி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கேட்டுக் கொள்வோம் என்றார்.

    அப்போது மாவட்ட பால்வளத்துறை தலைவர் வேலஞ்சேரி சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பிரியா சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×