search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘‘பிரிந்து சென்றவர்களால் நஷ்டமோ, இழப்போ இல்லை’’ நாமக்கல்லில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
    X

    ‘‘பிரிந்து சென்றவர்களால் நஷ்டமோ, இழப்போ இல்லை’’ நாமக்கல்லில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

    ‘‘அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இயக்கத்திற்கு நஷ்டமோ, இழப்போ இல்லை‘‘ என நாமக்கல்லில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    நாமக்கல்:

    தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கவும், அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நெசவாளர்களுக்கு பசுமைவீடு வழங்குதல், ஓய்வூதியம், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, தொழில் செய்ய கடன் என அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் சுமார் ரூ.320 கோடிக்கு விற்பனை நடைபெற்று உள்ளது. இந்த அரசு நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை விற்பனை செய்ய உதவியாக இருந்து வருகிறது. தற்போது கைத்தறி துணிகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு பல வகைகளில் ரகங்களை அறிமுகம் செய்து வருகிறோம். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதேசமயம் பாரம்பரியம் குன்றாமல் பார்த்து கொள்கிறோம்.

    தமிழகம் முழுவதும் தனியார் ஷோரூம்களுக்கு நிகராக குளிரூட்டப்பட்ட வசதியுடன் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 55 ஷோரூம்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 1,167 கைத்தறி நெசவாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 980 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள சங்கங்கள் குறைந்த அளவு நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவற்றை லாபத்தில் இயங்க வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனையை அதிகரிக்கவும், தேக்க நிலையை நீக்கவும் ஆண்டு முழுவதும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை அரசே ஏற்றுக்கொள்கிறது. இதுதவிர விழாக்காலம் மற்றும் தலைவர்கள் பிறந்த நாட்களில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காத்து வருகிறது. தமிழகத்தில் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. விலைவாசி உயர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

    தமிழக மக்களின் அன்றாட தேவையான உணவு பண்டங்கள் விலை உயராமல் பார்த்து வருகிறோம். 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவினாலும் உணவு பொருட்கள் பஞ்சம் இல்லை, பசி இல்லை, உணவு பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வெற்றி பயணம் தொடரும்.

    அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். இது கோடானகோடி தொண்டர்களை கொண்டது. இந்த இயக்கத்தில் இருந்து சிறு எண்ணிக்கையில் இருப்பவர்கள் பிரிந்து சென்றார்கள் அல்லது போய் விட்டார்கள் என்பதால் அ.தி.மு.க.வுக்கு நஷ்டமோ, இழப்போ இல்லை. இந்த இயக்கம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உழைப்பால் உருவாக்கப்பட்ட இயக்கம். அவர் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் வாழும், வளரும், தொண்டாற்றும் என சொல்லி உள்ளார்.

    அதன் அடிப்படையில் தாயுள்ளத்தோடு அனைவரும் வாருங்கள் என அழைக்கிறோம். வருவார்கள் என நம்புகிறோம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×