search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்தட்டுப்பாடு நீங்கி வருவதால் ஊட்டிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    X

    பணத்தட்டுப்பாடு நீங்கி வருவதால் ஊட்டிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

    நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கி வருவதால் ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஊட்டிக்கு நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பாவில் கடும் உறைப்பனி நிலவும், அதே நேரத்தில் இந்தியாவிலும் குளிர் காணப்படும்.

    இந்த காலநிலை ஐரோப்பியர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதன்காரணமாக மேற்கண்ட மாதங்களில் அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். மேலும் ஊட்டியில் இவர்கள் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அரசு தாவரவியல் பூங்கா, பல்வேறு கட்டிடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு செல்கின்றனர். இதுதவிர இங்குள்ள ஆங்கிலேயர்களின் கல்லறைக்கும் சென்று தங்ளது உறவினர்கள் யாராவது அடக்கம் செய்யப்பட்டு உள்ளனரா? என்றும் பார்வையிடுகின்றனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கவும் கடும் கட்டுப்பாடு விதித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவியது. மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

    பல ஐரோப்பா நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். இதனால் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மிக குறைந்த அளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே ஊட்டிக்கு வந்திருந்தனர். தற்போது நாடு முழுவதும் மெல்ல, மெல்ல பணத்தட்டுப்பாடு நீங்கி வருகிறது. வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வாடகை வாகனங்கள் மூலம் மைசூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு அரசு தாவரவியல் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு செல்கின்றனர்.

    மேலும் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, நூற்றாண்டை கடந்தும் இன்றும் இயங்கி கொண்டு இருக்கும் நீலகிரி மலைரெயிலில் பயணம் செய்வதற்கும் வெளிநாட்டு பயணிகள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஐரோப்பாவிற்கு இணையாக ஊட்டியின் காலநிலை உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×