search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட பாபு, கவிதா தங்களது மகள்களுடன் உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தற்கொலை செய்து கொண்ட பாபு, கவிதா தங்களது மகள்களுடன் உள்ளதை படத்தில் காணலாம்.

    விழுப்புரத்தில் 2 மகள்களை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

    விழுப்புரத்தில் தேனில் வி‌ஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை கொன்று கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கமலா நகர் கைவல்லித்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 33). நெல்வியாபாரி. இவர் விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் நெல் மற்றும் தானியங்களை வாங்கி வியாபாரிகளிடம் விற்கும் கமி‌ஷன் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வந்தார்.

    இவரது மனைவி கவிதா(28). இவர்களுக்கு கீர்த்தனா(3), கீர்த்திகா(3) ஆகிய இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கவிதாவின் உறவினர் வீட்டுக்கு பாபு குடும்பத்துடன் சென்றார்.

    நேற்று இரவு சென்னையில் இருந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். கவிதாவின் தந்தை மணிவண்ணன் அவர்களை ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    பாபு கடந்த சில நாட்களாக சோகத்துடன் காணப்பட்டார். பாபுவும், அவரது மனைவியும் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று இரவு கவிதா தனது மகள்கள் கீர்த்திகா, கீர்த்தனா ஆகியோருக்கு தேனில் வி‌ஷத்தை கலந்து கொடுத்தார்.

    இதை குடித்த கீர்த்திகாவும், கீர்த்தனாவும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தனர். பின்னர் கவிதா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து பாபு மின்விசிறியில் கவிதாவின் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இன்று காலை கவிதாவின் தந்தை மணிவண்ணன் தனது பேத்திகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பாபு, கவிதா, கீர்த்தனா, கீர்த்திகா ஆகியோர் பிணமாக கிடந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்.

    இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து பாபு உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாபுவும் அவரது மனைவியும் மகள்களை கொன்று எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரியவில்லை. கடன் தொல்லை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே கமலாநகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது அதே பகுதியில் 4 பேர் இறந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×