search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் 4 நாளாக மூடிக்கிடந்த ஏ.டி.எம். மையங்கள் - பொதுமக்கள் கடும் அவதி
    X

    வேலூரில் 4 நாளாக மூடிக்கிடந்த ஏ.டி.எம். மையங்கள் - பொதுமக்கள் கடும் அவதி

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஏ.டி.எம்.கள் பூட்டியே கிடந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
    வேலூர்:

    கருப்பு பணம், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவியது.

    முக்கியமாக சில்லரை கிடைக்காமல் பல தொழில்களில் முடக்கம் ஏற்பட்டன. சம்பளம் கிடைக்காமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஷூ கம்பெனி தொழிலாளர்கள், தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள், தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    பல தொழிலாளர்களுக்கு சில்லரை தட்டுப்பாட்டால் வெகுநாட்கள் சம்பளம் வழங்கப்படாமலே உள்ளது.

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வேலூரில் உள்ள வங்கிகளில் கூட்டம் அலை மோதியது.

    இங்குள்ள ஏ.டி.எம்.களிலும் அவ்வப்போது பணம் நிரப்பப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள்தான் அதிகம் கிடைத்தன. ஒரு சில ஏ.டி.எம்.களில் மட்டுமே 100 ரூபாய் நோட்கள் வந்தன.

    அவற்றை எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் இன்று காலை வேலூரில் உள்ள ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க முடியாத நிலையில் மக்கள் இருந்தனர்.

    பெரும்பாலான ஏ.டி.எம்.கள் கடந்த சனிக்கிழமை முதல் மூடியே கிடந்தன. வேலூருக்கு சிகிச்சைக்காக வெளிமாநில மக்கள் அதிகம் வருகின்றனர். அவர்களுக்கு பண தேவையை பூர்த்தி செய்வது ஏ.டி.எம்.கள் மட்டுமே.

    கடந்த 4 நாட்களாக ஏ.டி. எம்.கள் பூட்டியே கிடந்ததால் வேலூருக்கு வந்துள்ள வெளி மாநிலத்தவர்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    ஏ.டி.எம்.கள் திறக்கப்படாதது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, சில தவிர்க்க முடியாத காரணங்களால்தான் கடந்த 4 நாட்களாக ஏ.டி.எம்.கள் மூடிக் கிடந்தன. இன்று மதியம் முதல் நிலைமை சரியாகிவிடும்’’ என்று அவர்கள் கூறினர்.

    அதன்படி இன்று 12 மணிக்கு மேல் ஒரு சில ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டு பணம் நிரப்பப்பட்டன. வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி ஏ.டி.எம். திறக்கப்பட்டதும் பணம் எடுக்க அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் பணம் எடுத்து சென்றனர். இதே நிலையை வேலூரில் உள்ள பல வங்கி ஏ.டி.எம்.களில் காண முடிந்தது.
    Next Story
    ×