search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்களுக்கு தர்ம அடி
    X

    குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்களுக்கு தர்ம அடி

    குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    களியக்காவிளை:

    குழித்துறையில் ஆடி அமாவாசையையொட்டி ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான வாவுபலி பொருட்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. நாளையுடன் வாவுபலி பொருட்காட்சி நிறைவடைகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாவுபலி பொருட்காட்சியை காண குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்திருந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டத்திற்குள் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கும் இங்குமாக வலம் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சகீர் அந்த 2 வாலிபர்களையும் பிடித்து எச்சரித்தார்.

    அப்போது திடீரென 2 வாலிபர்களும் போலீஸ்காரர் சகீரை சட்டையைப்பிடித்து தாக்கினார்கள். இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசை தாக்கிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

    பொதுமக்கள் பிடியில் இருந்து 2 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களை விடாமல் பொதுமக்கள் துரத்தினார்கள். 2 வாலிபர்களும் கூட்டத்திற்குள் ஓடிய போது அங்கு கூடி இருந்த பெண்கள், பொதுமக்கள் அலறியடித்து 4 திசையிலும் சிதறி ஓடினார்கள்.

    சிறிது தூரம் துரத்திச் சென்று அந்த 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் 2 வாலிபர்களையும் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

    2 வாலிபர்களும் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சகீர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மருதங்கோட்டைச் சேர்ந்த பினோ, ரெஜிவ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×