search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் கலந்த 100 டி.எம்.சி. தண்ணீர்
    X

    மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் கலந்த 100 டி.எம்.சி. தண்ணீர்

    • கடலில் சென்று கலக்கும் ஒரு டி.எம்.சி. நீரை தடுத்து சேமித்தால், அதில் பல ஏரிகளை நிரப்பலாம்.
    • கர்நாடக மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேட்டூர்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழையினால் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் தன்ணீரின் அளவு அபரிதமான இருக்கிறது. பல ஆண்டுகளில் மழை குறைவாக பெய்வதும், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதும் வழக்கமாக இருந்தது. மழையோ, வறட்சியோ, தண்ணீர் இல்லாமல் உலகமே இயங்க முடியாது. எல்லாவற்றையும் அளப்பது போன்று தண்ணீரும் பலவித அளவுகோள்களால் அளவிடப்படுகிறது. குறைந்தபட்சம் மில்லி லிட்டர் என்பது முதல் டி.எம்.சி. என்பது வரை பல அளவீடுகள் உள்ளன. ஒரு டி.எம்.சி. என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் என்பதன் சுருக்கமாகும். அதாவது ஒரு டி.எம்.சி. நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும்.

    1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீர் ஆகும். ஒரு டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர். 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 24 லட்சம் லாரிகளில் தான் ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும். தற்போது பெய்து வரும் பருவமழையின்போது, பல டி.எம்.சி. தண்ணீர் வீணாகி வருகிறது. ஆண்டுக்கு 100 முதல் 400 டி.எம்.சி. மழைநீர் கடலில் கலக்கிறது.

    பொதுவாக நொடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. பூமியில் 71 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது என்றாலும், அதில், 97.5 சதவீதம் உப்பு நீர் தான் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். கடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் நாம் அதை குடிக்க முடியாது.

    கடலில் சென்று கலக்கும் ஒரு டி.எம்.சி. நீரை தடுத்து சேமித்தால், அதில் பல ஏரிகளை நிரப்பலாம். சென்னை முழுவதற்கும் சேர்த்து ஓராண்டு குடிநீருக்கு 12 டி.எம்.சி. நீர் இருந்தால் போதும் என்கின்றனர் அறிஞர்கள். ஆண்டுதோறும் உபரிநீர் என்று நூற்றுக்கணக்கான டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு அனுப்பப்படுகிறது.

    மேட்டூர் அணை சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அணையின் முழுக்கொள்ளளவு 93.4 டி.எம்.சி. ஆகும். தமிழகத்தின் சுமார் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர் கொள்ளவை விட 2 மடங்கு கொள்ளளவு கொண்டது மேட்டூர் அணை.

    கர்நாடகாவில் காவிரி பாசன அணைகளில் 105.55 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். கர்நாடகாவில் திறந்து விடப்படும் காவிரி நீர் முழுவதையும் தாங்கி நிற்கும் அணையாக தமிழகத்தின் மேட்டூர் அணை உள்ளது.

    கர்நாடக மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிக அளவில் உள்ளது . கடந்த மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

    இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை ஒரு லட்சத்து 77 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது.

    கடந்த மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 21 நாட்களாக அணை நிரம்பி இருக்கும் நிலையில் அணைக்கு 120 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இதையடுத்து பாசனம் குடிநீர் தேவை போக உபரிநீராக 100 டி.எம்.சி. நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    தமிழ்நாட்டில் நீர்வளம் மிகவும் குறைவு. நெல்லை மாவட்டத்தில் உருவாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் போய் கலக்கும் தாமிரபரணி ஆற்றை தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகவில்லை. மற்ற ஆறுகளில் எல்லாம் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான் ஓடிவருகிறது.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் காவிரியில் தண்ணீர் ஓடினால்தான் விவசாயம் தழைக்கும் என்ற வகையில், காவிரியை நம்பியே வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகிறார்கள் டெல்டா பாசன விவசாயிகள். கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் மேட்டூர் அணை நிரம்பும். அதன்பிறகு மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும்.

    கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிடவேண்டிய நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு திறக்காவிட்டாலும், அவர்களுக்கு இனிமேல் தண்ணீரை தேக்கி வைக்கமுடியாத நிலையில் வடிகாலாக தண்ணீர் திறந்துவிடப்படும் சூழ்நிலையில், பல நேரங்களில் மேட்டூருக்கு அதிகளவு தண்ணீர் வருகிறது.

    அந்த வகையில் சமீபத்திய மழையால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டு இருக்கிறது. பல நேரங்களில் காவிரியில் பாசனத்துக்கு போக மீதமுள்ள தண்ணீரை சேமிக்க முடியாமல், கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் கடலுக்குள் வீணாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வீணாகும் தண்ணீர் மேட்டூரின் மொத்த கொள்ளளவைவிட, 1½ மடங்கு அதிகமாகும். இவ்வாறு வீணாக செல்லும் தண்ணீரை சேமிப்பதற்காக திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

    மேட்டூரில் உள்ள உபரிநீர் 0.5 டி.எம்.சி. தண்ணீரை அந்த மாவட்டத்தில் உள்ள மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி தாலுகா விவசாயிகள் பயனடையும் வகையில் 100 குளங்களில் நிரப்பும் திட்டம் நடைமுறையில் உள்ளது. பல குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப குழாய்கள் மூலமாக பம்ப் செய்யவேண்டும். தற்போதுள்ள சூழலில் உபரிநீர் இந்த வறண்ட குளங்களுக்கு திருப்பிவிடப்பட்டால் விவசாயம் மேலும் செழிப்படையும்.

    சேலம் மாவட்டத்தைப்போல, காவிரி ஓடும் எல்லா மாவட்டங்களிலும் உபரிநீரை இவ்வாறு அங்குள்ள குளங்கள், கால்வாய்கள், ஏரிகளில் நிரப்ப திட்டம் தீட்டப்படவேண்டும். இதுபோல, தாமிரபரணி, வைகை உள்பட பல ஆறுகளில் கடலில்போய் தண்ணீர் கலக்காத வகையில், தண்ணீரை சேமிக்க புதிய திட்டங்கள் தீட்டப்படவேண்டும். ஒவ்வொரு துளி தண்ணீரும் ஒரு பவுன் தங்கத்துக்கு நிகரானது என்று மதிப்பளித்து செயல்படவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    Next Story
    ×