search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இகோர் ஸ்டிமாக்
    X
    இகோர் ஸ்டிமாக்

    இந்திய கால்பந்து அணியில் உடல் தகுதி பிரச்சினை எதுவும் இல்லை - பயிற்சியாளர் விளக்கம்

    இந்திய கால்பந்து அணியில் உடல் தகுதி பிரச்சினை எதுவும் இல்லை என்று பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் தெரிவித்தார்.
    தோகா:

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளாகும். கவுகாத்தியில் நடந்த தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி கடைசி 10 நிமிடத்திற்குள் 2 கோல்கள் வாங்கி தோல்வியை சந்தித்தது.

    இந்த நிலையில் தோகாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 103 இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய கோப்பை சாம்பியனும், 62-வது இடத்தில் உள்ள கத்தாரை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. டிரா செய்ததன் மூலம் இந்திய அணி ஒரு புள்ளியை பெற்றுள்ளது. காய்ச்சல் காரணமாக இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து கேப்டன் பொறுப்பை கவனித்தார். கோல்கீப்பிங்கில் அருமையாக செயல்பட்ட அவர் கத்தார் அணியினரின் கோல் அடிக்கும் முயற்சிகளை பலமுறை தடுத்து நிறுத்தினார்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தரவரிசையில் 182-வது இடத்தில் உள்ள வங்காளதேசத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    கத்தாருக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடப்பு ஆசிய சாம்பியான கத்தார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புள்ளி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தில் சில விஷயங்களில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். நமது அணி வீரர்களுக்கு மட்டுமின்றி கத்தார் அணி வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இரண்டு அணியின் கோல் எல்லை பகுதிகளிலும் பந்து பலமுறை வலம் வந்தது விறுவிறுப்பாக இருந்தது. இந்த ஆட்டம் எங்களுக்கு சிறந்த அனுபவமாகும். நமது அணி வீரர்கள் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது.

    கத்தார் அணி கோல் அடிக்க அதிக வாய்ப்புகளை உருவாக்கியது. நமது அணியும் கோல் அடிக்க பல வாய்ப்புகளை ஏற்படுத்தியது. நாங்கள் உடல்தகுதி நிறைந்த அணி என்பதை இந்த ஆட்டத்தில் நிரூபித்து இருக்கிறோம். அணியில் உடல் தகுதி பிரச்சினை இருப்பதாக விமர்சிப்பதில் உண்மையில்லை. கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் நமது வீரர்கள் கடைசி நிமிடம் வரை விரைவாக விளையாடினார்கள். கொல்கத்தாவில் நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் குறைந்தபட்சம் 80 ஆயிரம் ரசிகர்களாவது வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×