search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் நடால்
    X
    ரபேல் நடால்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீரரான டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிட நேரம் நீடித்தது.

    3 முறை சாம்பியனான ரபேல் நடால் 8-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறிய நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ரபேல் நடால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    மற்றொரு காலிறுதியில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான மான்பில்சை (பிரான்ஸ்) போராடி சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரேட்டினி அரையிறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அரையிறுதியில் நடால்- பெரேட்டினி ஆகியோர் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச்சை (குரோஷியா) விரட்டியடித்து முதல்முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
    Next Story
    ×