search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி கொண்டாட்டத்தில் யாஷ்அஸ்வினி
    X
    வெற்றி கொண்டாட்டத்தில் யாஷ்அஸ்வினி

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினிக்கு தங்கம்

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி இடத்தையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்

    ரியோடி ஜெனீரோ:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில், தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவின் யாஷ்அஸ்வினி சிங் தேஸ்வால் 8 பேர் இடையிலான இறுதி சுற்றிலும் பிரமாதப்படுத்தினார். அவர் 236.7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி இடத்தையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார். இதையும் சேர்த்து 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குக்கு இந்தியா தரப்பில் துப்பாக்கி சுடுதலில் 9 இடங்கள் உறுதியாகி உள்ளன. 22 வயதான யாஷ்அஸ்வினி சண்டிகாரில் உள்ள கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    யாஷ்அஸ்வினியை விட 1.9 புள்ளி பின்தங்கிய ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான உக்ரைனின் ஒலெனா கோஸ்டெவிச் 234.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஜாஸ்மினா மிலாவோனோவிச் (செர்பியா) 215.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

    இந்த தொடரில் இந்தியாவுக்கு கிட்டிய 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அபிஷேக் வர்மா, இளவேனில் ஆகியோரும் தங்கம் வென்று இருந்தனர்.
    Next Story
    ×