search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபா மாலிக்
    X
    தீபா மாலிக்

    தீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு

    விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது பெறுகிறார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த கமிட்டி கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தது. இதில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பது என்று ஏற்கனவே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனையான தீபா மாலிக்குக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    அரியானாவைச் சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். தொடர்ச்சியாக மூன்று பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான்.

    இதேபோல், அர்ஜுனா விருதுக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், தடகள நட்சத்திரங்கள் தஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் அடங்குவர்.

    ரவிந்திர ஜடேஜா

    மேலும், சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு விமல்குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லான் (தடகளம்) ஆகியோர் தேர்வாகினர்.

    சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு மெஸ்பன் பட்டேல் (ஹாக்கி), ராம்பிர் சிங் கோகர் (கபடி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்) ஆகியோரும் தேர்வாகினர்.

    வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு மானுல் பிரெட்ரிக்ஸ் (ஹாக்கி), ஆருப் பசாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நிட்டேன் கிர்டான் (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை) ஆகியோரும் தேர்வாகினர்.

    இந்த பட்டியலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடும். கேல் ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் பாராட்டு பட்டயத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
    Next Story
    ×