search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் டிராவிட்
    X
    ராகுல் டிராவிட்

    டிராவிட் விவகாரத்தில் இரட்டை ஆதாய பிரச்சினை இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

    டிராவிட் நியமனம் விஷயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சினை எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டிராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகித்ததால் இந்த நியமனத்தில் இரட்டை ஆதாயம் முரண்பாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார். டிராவிட் நன்னடத்தை அதிகாரிக்கு பதில் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பின்னர் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ரவி தோஜ்டே அளித்த பேட்டியில், ‘டிராவிட் நியமனம் விஷயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சினை எதுவும் இல்லை. அவரது நியமனத்துக்கு நிர்வாக கமிட்டி அனுமதி அளித்து விட்டது. நன்னடத்தை அதிகாரி இரட்டை ஆதாய பிரச்சினை இருப்பதாக கருதினால் அதற்கு நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தேர்வு செய்யும். கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தன்னிச்சையான அமைப்பு. அவர்கள் வழக்கமான விதிமுறையின்படி பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள்’ என்றார்.

    Next Story
    ×