search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி.
    X
    பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி.

    புரோ கபடி - பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா

    12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டியில் உ.பி.யோத்தா 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.
    ஆமதாபாத்:

    12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டம் 29-29 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி முதலில் 5 புள்ளிகள் முன்னிலை வகித்தாலும் அதனை நீண்ட நேரம் தக்க வைக்க முடியவில்லை. உ.பி.யோத்தா அணி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து பெங்களூரு புல்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 15-15 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. பிற்பாதியில் உ.பி.யோத்தா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன் மீண்டும் ஒரு முறை பெங்களூரு புல்சை ‘ஆல்-அவுட்’ செய்தது. முடிவில் உ.பி.யோத்தா 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×