search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி
    X
    ஐசிசி

    பவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா? -அலர்டைஸ் விளக்கம்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பவுண்டரி மூலம் அணியின் வெற்றியை தீர்மானிக்கும் முறை குறித்து ஜியோப் அலர்டைஸ் விளக்கம் அளித்துள்ளார்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 14ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.

    இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது. இதில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 241 ரன்களை, இரண்டாவதாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சேஸ் செய்தது.

    எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இதனால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை விட அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் ஐசிசி விதியின்படி,  வெற்றிப் பெற்றது.

    இதனால் உலக கோப்பையை இங்கிலாந்து அணி முதன்முறையாக சொந்த மண்ணிலேயே கைப்பற்றியது. இந்த போட்டியில் பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

    உலக கோப்பையுடன் இங்கிலாந்து அணி

    இந்த முறையை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தனர். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சலின் மேலாளர் ஜியோப் அலர்டைஸ் கூறியதாவது:

    கடந்த 2009ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து, டை ஆன போட்டியின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. சூப்பர் ஓவரும் டை ஆகும் பட்சத்தில் அந்த போட்டியில் எந்த அணி சிறந்து விளங்கியுள்ளது என்பதை வைத்தே வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும்.

    இந்த முடிவு பவுண்டரிகளுடனும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் டி20 போட்டிகளில் இந்த பவுண்டரி முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் உலக கோப்பையிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

    ஆனால், இதில் கருத்து வேறுபாடோ, விமர்சனங்களோ எழும் பட்சத்தில் நிச்சயம் கமிட்டி, பவுண்டரி முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  


    Next Story
    ×