search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய சங்கர்
    X
    விஜய சங்கர்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு விளையாடுவேன் - விஜய்சங்கர்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடுவேன் என்று ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆகஸ்டு 15-ம் தேதி நடக்கிறது.

    இதையொட்டி, சென்னையில் நேற்று டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரருமான விஜய் சங்கர் பங்கேற்று பேசினார்.
    அப்போது அவர் கூறியதாவது:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகும். இதன்மூலம் வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வாகி விளையாடி இருக்கிறார்கள். அதுபோல் அவர்கள் தமிழக அணிக்காக ரஞ்சி போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும் பலர் டி.என்.பி.எல். போட்டியில் நன்றாக விளையாடி ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    டி.என்.பி.எல். தொடரில் இதுவரை நான் விளையாடவில்லை. இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டியில் நான் அறிமுகம் ஆவேன் என்று நம்புகிறேன். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளேன். அங்கு சென்ற பிறகு தான் எனது உடல்தகுதி குறித்து தெரிய வரும் என் தெரிவித்தார்.

    உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த விஜய்சங்கர் காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் விலகியது குறிப்பிடத்தக்கது.



    நிகழ்ச்சியில் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு தேர்வாகியுள்ள ஜெபசெல்வின், ஆனந்த், சந்தானசேகர் ஆகியோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் தான். எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. கிரிக்கெட் நன்றாக ஆடினால் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டார்.
    Next Story
    ×