search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து வீராங்கனை
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து வீராங்கனை

    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து

    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நெதர்லாந்து அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    லயான்:

    பிரான்சில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லயானில் உள்ள பார்க் ஒலிம்பிக் லயானியாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    அதன்பின்னர் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து, ஸ்வீடன் அணிகள் மோதின. துவக்கத்தில் ஸ்வீடன் அணி ஆக்ரோஷமாக முன்னேறியது. அவர்களுக்கு கோல் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால், நெதர்லாந்தின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் கோல் அடிக்க முடியவில்லை. அதேசமயம், நெதர்லாந்து அணியையும் கோல் அடிக்க விடாமல் ஸ்வீடன் வீராங்கனைகள் அபாரமாக தடுத்தனர்.

    இதனால் போட்டி நேரம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. எனவே கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது ஸ்வீடன் அணி வீராங்கனைகள் சற்று சோர்வுடன் காணப்பட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய நெதர்லாந்து அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணியின் ஜாக்கி குரோனன் 99-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து அசத்தினார்.

    அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி, 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோபபை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நெதர்லாந்து வீராங்கனைகள்


    இதையடுத்து 7-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவுடன் நெதர்லாந்து அணி மோத உள்ளது. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் இதில் விளையாடுகின்றன.
    Next Story
    ×