search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு
    X

    2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு

    பாராளுமன்றம் தேர்தல் நடைபெற இருப்பதால், ஐபிஎல் தொடரை பிரச்சனையின்றி நடத்த பிசிசிஐ 20 இடங்களை தயாராக வைத்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 ஐபிஎல் தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதேபோல 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் (துபாய், அபுதாபி, சார்ஜா) பாதி ஆட்டங்கள் தேர்தல் காரணமாக நடத்தப்பட்டன.

    இந்த ஆண்டு நடைபெறும் 12-வது ஐபிஎல் போட்டியும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக பாதுகாப்பு கருதி வெளிநாட்டுக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று கருதப்பட்டது.

    இந்நிலையில் ‘‘ஐபிஎல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும். வெளிநாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது’’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    ஐபிஎல் போட்டி வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் தொடங்கும். உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி தொடங்குவதால் அதற்கு 15 தினங்களுக்கு முன் ஐபிஎல் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். இதனால்தான் முன்னதாக மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது.

    மே 12-ந்தேதி ஐபிஎல் போட்டிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கு ஏற்றவாறு தேதி மற்றும் இடங்கள் முடிவு செய்து போட்டி அட்டவணை வெளியாகும்.

    ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் என்ற முறையில் எப்போதும் நடைபெறும். இந்த முறை தேர்தல் நடைபெறுவதால் அதில் மாற்றம் செய்யப்படுகிறது. பொதுவான இடத்திலும் அணிகள் விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

    இதற்காக 20 இடங்களை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தயாராக வைத்துள்ளன. தேர்தல் தேதிக்கு ஏற்றுவாறு இடங்கள் நிர்ணயிக்கப்படும்.
    Next Story
    ×