search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சி வீரன்சை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சிவக்குமார்
    X

    காஞ்சி வீரன்சை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சிவக்குமார்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்சை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சிவக்குமார் கூறியுள்ளார். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.

    திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த 22-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணி முதலில் ‘பேட்டிங்’ செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் கார்த்திக் 44 பந்தில் 76 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), முருகன் அஸ்வின் 17 பந்தில் 34 ரன்னும் (4 சிக்சர்), கேப்டன் கோபிநாத் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாபா அபராஜித் 2 விக்கெட்டும், சுனில்சாம், அவுசிக் சீனிவாஸ், திவாகர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் அதிக பட்சமாக அருண் 19 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), விஷால் வைத்யா 18 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி), திவாகர் 24 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    முருகன் அஸ்வின், சம்ருத்பட், சிவக்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹரீஷ் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    5 ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்தோம். இந்த ஆட்டத்தில் 3 பகுதிகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) நன்றாக செயல்பட்டோம். இதனால் வெற்றியை பெற முடிந்தது.

    மிடில் ஓவர்களில் தடுமாறுவது கிரிக்கெட்டில் நடக்க கூடியதுதான். சில நேரங்களில் விக்கெட்டை நிலைநிறுத்த சில ஓவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். என்றாலும் இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்து விட்டோம்.

    ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்ததால் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நன்றாக ஆடி நெருங்கி வந்தனர். எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சி வீரன்ஸ் சந்தித்த 5-வது தோல்வியாகும். தோல்வி குறித்து அந்த அணி வீரர் சுனில் சாம் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 181 ரன்னை சேஸ் செய்ய இயலும். ஆனால் தொடகத்தில் ரன் அவுட் முறையில் விக்கெட்டுகளை இழந்தோம். இது பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் எங்களது பீல்டிங் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வருகிற 3-ந் தேதி எதிர்கொள்கிறது.

    காஞ்சி வீரன்ஸ் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 5-ந் தேதி சந்திக்கிறது.

    இன்று நடைபெறும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளியும் பெற்றுள்ளன. ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    Next Story
    ×