search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: இங்கிலாந்தை சந்திக்கிறது, இந்தியா
    X

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: இங்கிலாந்தை சந்திக்கிறது, இந்தியா

    8 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் இந்திய அணி இங்கிலாந்தை சந்திக்கிறது.
    டெர்பி:

    11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 18, 20-ந்தேதிகளில் அரை இறுதி ஆட்டமும், ஜூலை 23-ந்தேதி லண்டனில் இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

    தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவும், போட்டியை நடத்தும் இங்கிலாந்தும் டெர்பி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி ஓரளவு வலுவாகவே இருக்கிறது. 34 வயதான மிதாலி ராஜ் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்து அனுபவம் வாய்ந்தவர். ஒரு நாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளரான ஜூலன் கோஸ்வாமி, அண்மையில் அயர்லாந்துக்கு எதிராக முதலாவது விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து வரலாறு படைத்த தீப்தி சர்மா, பூனம் ரவுத் ஜோடி, ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷிகா பான்டே, உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் ஹீதர் நைட் தலைமையில் இங்கிலாந்தும் பலம் வாய்ந்தது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த அணி ஏற்கனவே 3 முறை உலக கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது. அதனால் முதல் தடையை கடக்கவே இந்தியா பெரும்பாடு பட வேண்டி இருக்கும்.

    ஆண்கள் உலக கோப்பையில் ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், பெண்கள் உலக கோப்பையில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இதுவரை எந்த ஆசிய அணியும் பெண்கள் உலக கோப்பையில் மகுடம் சூடியதில்லை. இந்திய அணி 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2-வது இடத்தை பிடித்தது. இதுவே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். கடந்த ஆண்டு இந்திய அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    மிதாலி ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘தென்ஆப்பிரிக்காவில் நடந்த 4 நாடுகள் இடையிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது எங்களது நம்பிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடும் போது இங்குள்ள (இங்கிலாந்து) சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. அதற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம்.



    தென்ஆப்பிரிக்காவில் சாதித்தது போன்றே இங்கும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த உலக கோப்பையில் அரைஇறுதியை எட்டுவதே எங்களது முதல் இலக்கு. அதற்கு தொடர் முழுவதும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உத்வேகத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம்’ என்றார்.

    பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடுவர்களின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். முறை இந்த உலக கோப்பையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதுவும் எல்லா ஆட்டங்களுக்கும் கிடையாது. மொத்தமுள்ள 31 ஆட்டங்களில் 2 அரைஇறுதி, ஒரு இறுதிப்போட்டி மற்றும் 7 லீக் ஆட்டங்கள் மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த 10 ஆட்டங்களில் மட்டும் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் இந்தியா - இங்கிலாந்து, இந்தியா-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-இந்தியா, இலங்கை - இந்தியா ஆகிய லீக் ஆட்டங்களும் அடங்கும்.

    இந்த போட்டிக்கான இந்திய அணி வருமாறு:- மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பான்டே, எக்கா பிஷ்ட், சுஷ்மா வர்மா, மான்சி ஜோஷி, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், நுஜாத் பர்வீன்.

    இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் (மாலை 3 மணி) மோதுகின்றன. 
    Next Story
    ×