search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: தமிழ்நாட்டை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
    X

    ரஞ்சி டிராபி: தமிழ்நாட்டை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

    ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, தமிழ்நாடு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ராஜ்கோட்டில் நடைபெற்ற ரஞ்சி டிராபியின் அரையிறுதியொன்றில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 305 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 411 ரன்கள் குவித்தது.

    முதல் இன்னிங்சில் மும்பை அணி முன்னிலைப் பெற்றதால், தமிழ்நாடு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

    94 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த் (122), பாபா இந்திரஜித் (138) ஆகியோரின் சதத்தால் தமிழ்நாடு அணி 6 வி்க்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதனால் மும்பை அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ப்ரித்வி ஷா, வகாலே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் எடுத்திருந்தது. ஷா 1 ரன்னுடனும், வகாலே 3 ரன்னடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து இந்த ஜோடி அடித்தளம் அமைத்து கொடுத்தது. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 40 ரன்கள் சேர்த்து அவுட்டாக, 17 வயதே ஆன ப்ரித்வி ஷா தனது அறிமுக போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள் சேர்க்க, ப்ரித்வி ஷா 120 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இவரது சதத்தால் மும்பை அணி 62.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றிக்கான 251 ரன்னை எடுத்தது.

    இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை அணி ஏற்கனவே 41 முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. தற்போது 42-வது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் இறுதிப் போட்டியில் குஜராத்தை சந்திக்க இருக்கிறது.
    Next Story
    ×