search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனிமேல் டி20 அணியின் கேப்டனாக இருக்கமாட்டேன்: டேரன் சமி சொல்கிறார்
    X

    இனிமேல் டி20 அணியின் கேப்டனாக இருக்கமாட்டேன்: டேரன் சமி சொல்கிறார்

    வரும் காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கமாட்டேன் என்று டேரன் சமி கூறியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் டேரன் சமி. இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், டி20 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை டி20 உலக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் டேரன் சமிதான்.

    6 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த இவர், இனி வரும் காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருக்கமாட்டேன் என்று  கூறியுள்ளார்.

    இதுகுறித்து டேரன் சமி கூறுகையில் ‘‘நேற்று காலை தேர்வுக் குழுவின் தலைவர் எனக்கு போன் செய்திருந்தார். சுமார் 30 வினாடிகள் என்னிடம் பேசினார். அப்போது நாங்கள் டி20 அணியின் கேப்டன் பதவி குறித்து பரிசீலனை செய்ய இருக்கிறோம் என்றார். உங்களுடைய ஆட்டத்திறன் தனித்தன்மை வாய்ந்த தேர்வுக்கு உகந்ததாக இல்லை என்றார். இதனால் இனிமேல் நான் டி20 அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை.

    இதுபற்றி ஒன்றுமில்லை. டேரன் சமியை (என்னை) வைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இல்லை என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வருங்காலத்திற்கான நபரை தேடுகிறார்கள். புதிய கேப்டனுக்கு நான் வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். தற்போது வரை யார் என்று தெரியவில்லை என்பதால், நான் எந்தவொரு வீரரின் பெயரையும் குறிப்பிடவில்லை. யாராக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை திறமையாக வழிநடத்தி அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வரவேண்டும்.

    என்னுடைய கேப்டன் பதவிக்காலத்தில் நான் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளேன். இந்த நினைவினால் நான் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியில் இருப்பேன். நான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. 6 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த என்னுடைய ரசிகர்கள், என்னுடன் விளையாடிய சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆடுகளத்தில் இறங்கும்போதும் நான் முழு மனதுடனும், என்னுடைய ஆன்மாவுடன் அணிக்காக விளையாடினேன் என்பது எனக்குத் தெரியும்.’’ என்றார்.
    Next Story
    ×