search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்-66
    X

    கருணை தெய்வம் காஞ்சி மகான்-66

    • கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    • சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பாடசாலையில் வேதம் கற்று வரும் சிறார்களுக்குத் திடீர் ஜுரம் ஏற்பட்டது.

    'சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பாடசாலையில் வேதம் கற்று வரும் சிறார்களுக்குத் திடீர் ஜுரம் ஏற்பட்டது.

    தனக்கு ஒரு உடல்நிலைக் குறைபாடு என்றால்கூட பெரியவா அதைப் பொறுத்துக் கொள்வார். ஆனால், வேதம் கற்கிற சிறார்களுக்கு ஏதேனும் சிரமம், அவஸ்தை என்றால், மகான் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

    காஞ்சி ஸ்ரீமடத்தில் பிக்‌ஷாவந்தனம் முடித்து விட்டு சென்னைக்குத் திரும்ப இருந்த தியாகராஜனை ஒரு கணம் நிறுத்தினார். சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்பி அந்த மாணவர்களின் உடல்நலம் பற்றி விசாரித்து வரும்படி உத்தரவிட்டார் பெரியவா.

    அதன்படி பாடசாலைக்குப் போனார். மாணவர்களையும், அவர்களுக்கு வேத வகுப்புகள் எடுக்கும் குருவையும் பார்த்து விட்டு ஸ்ரீமடத்துக்குத் திரும்பினார் தியாகராஜன்.

    'பசங்களை எப்படி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போனாளாம்?' என்ற பெரியவாளின் கேள்விக்குப் பதில் சொன்னார்.

    ''பெரியவா... ரிக்‌ஷாவுல கூட்டிண்டு போனாராம் வாத்தியார். டாக்டர்கிட்ட காட்டிட்டுப் பாடசாலைக்குத் திரும்பிட்டார்.''

    ''இப்ப பசங்கல்லாம் எப்படி இருக்கா?''

    ''பரவாயில்லை பெரியவா. பாடசாலைக்குப் போனவுடனே பசங்களைப் பார்த்ததும் பயந்து போயிட்டேன். அப்புறம் விசாரிச்சா, இப்ப கொஞ்சம் தேவலை... நன்னாயிட்டானு வாத்தியார் சொன்னார். அப்பதான் நிம்மதியா இருந்தது.''

    தலையை மேலும் கீழும் அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார் மகா பெரியவா. ஓரிரு நிமிடங்கள் போயிருக்கும். பிறகு, ''பசங்களுக்கெல்லாம் தலா ரெண்டு ரெண்டு ரூபா கொடுத்திருப்பியா?'' என்று கேட்டார் பெரியவா.

    ஆச்சரியத்துடன், ''ஆமா பெரியவா. அதோட வாத்தியார் கையில இருபது ரூபா கொடுத்தேன். பசங்களுக்கான ஆஸ்பத்திரி செலவுக்கு வெச்சுக்கோங்கனு சொல்லிட்டு வந்தேன்'' என்றார் தியாகராஜன்.

    எத்தனை நல்ல மனம் தியாகராஜனுக்கு!

    அந்தக் காலத்திலே இரண்டு ரூபாய் என்பதே பெரிய விஷயம். தவிர, பாடசாலை வாத்தியாருக்கு இருபது ரூபாய்.

    ஒருவருக்கு உதவுவது பெரிய விஷயமல்ல... அந்த உதவியை மற்றவர்களிடம் சொல்லிக் காண்பிக்காமல் இருப்பதே பெரிய விஷயம்.

    இன்றைக்கு இத்தகைய மனம் பலருக்கும் வாய்க்கவில்லை. ஆனால், தியாகராஜனுக்கு அப்போது வாய்த்திருந்தது. தான் செய்ததைப் பற்றி எவரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், பெரியவா சொல்லி விட்டார். இது அனுக்ரஹம்!

    அப்போது மணி இரவு ஏழரை.

    பிக்‌ஷாவந்தனம் ஆயிற்று. பெரியவா கொடுத்த பாடசாலை அசைன்மெண்ட்டும் பூர்த்தியாயிற்று. அடுத்து, தியாகராஜன் சென்னைக்குப் புறப்பட வேண்டுமே!

    அனுமதி வேண்டி பெரியவாளின் திருமுகம் பார்த்தார்.

    இவரது முகக் குறிப்புகளை அறிந்து கொண்டவராய், ''நீ சென்னைக்குப் புறப்படணுமோல்லியோ... சரி, ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நீ என்ன பண்றே... நேரா பெருந்தேவித் தாயாரைத் தரிசனம் பண்ணிட்டு ஆத்துக்குப் போ'' என்றார்.

    இதற்கு தியாகராஜன் பதில் சொல்வதற்கு முன், பெரியவாளே இடைமறித்து, ''பெருந்தேவித் தாயார் எங்கே இருக்கா தெரியுமோ?'' என்று கேட்டார்.

    ''தெரியும் பெரியவா. சின்ன காஞ்சிபுரம் வரதராஜர் கோவில்ல தாயார் அருளிண்டு இருக்கா'' என்றார் நெகிழ்வுடன்.

    பெரியவா பிரசாதம் கொடுத்து அருளினார். ஸ்ரீமடத்தில் இருந்து புறப்பட்டார்கள்.

    வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குள் நுழைந்தார்கள் தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர்.

    ஆனால், பாருங்கள்... வரதராஜர் திருச்சந்நிதி நடையைச் சாற்றி விட்டு, கதவுகளையும் பூட்டி விட்டு வெளியே வந்தார் பட்டாச்சார்யர். அடுத்து, பெருந்தேவித் தாயார் சந்நிதி நடையை சாற்றுவதற்குச் சென்று கொண்டிருந்தார்.

    நிலைமையைப் புரிந்து அவர் பின்னாலேயே வேகமாக ஓடினார் தியாகராஜன்.

    தன்னைத் தொடர்ந்து யாரோ சிலர் வேகமாக வருவது கண்டு பட்டாச்சார்யர் திரும்பிப் பார்த்தார். அவருக்கு நமஸ்காரம் சொன்னார் தியாகராஜன்.

    பிறகு, ''பெருந்தேவித் தாயாரைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போகச் சொல்லி எனக்குப் பெரியவா உத்தரவிட்டார்'' என்றார் அவரிடம் மூச்சிரைக்க.

    ''வாங்கோ... பெரியவா சரியாத்தான் சொல்லி அனுப்பிருக்கா'' என்று பெருந்தேவித் தாயாரின் சந்நிதிக்குள் நுழைந்தார்.

    தாயாருக்கு ஆரத்தி காண்பித்தார். வெளியே வந்து இவர்களுக்குப் பிரசாதம் கொடுத்தார். இதை அடுத்து ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு சந்நிதியைப் பூட்டிக் கொண்டு நடந்தார் பட்டாச்சார்யர்.

    தியாகராஜன் குடும்பம் வரதராஜர் ஆலயத்துக்குள் நுழைந்ததும், அந்த சந்நிதி பூட்டப்பட்டிருக்கும் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

    இவர்கள் செல்கிற நேரத்துக்கு தாயாரை மட்டுமே தரிசிக்க முடியும் என்று பெரியவா எப்படிச் சொன்னார்?

    ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதுதான் காஞ்சி மகா பெரியவா!

    இருந்த இடத்தில் இருந்தபடி எங்கு என்ன நடக்கிறது என்பதைப் பெரியவா பலருக்கும் சொன்ன விதம் வியக்க வைக்கக் கூடியது. அதே சமயம் தனக்கு இப்படிப்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதைப் பெரியவா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை.

    தனக்கு என்ன கிடைத்தாலும் 'அது காமாட்சிதேவியின் அருள்' என்றே உரக்கச் சொல்வார்.

    இன்றைக்கு ஒரு சாதாரண காரியத்தைச் செய்து முடித்து விட்டு, 'இதை நான்தான் செய்தேன்' என்று பிரகடனமும் விளம்பரமும் செய்பவர்கள் யோசிக்க வேண்டும்.

    நமக்கும் மேற்பட்ட ஒரு சக்திதான் நம்மையெல்லாம் ஆட்டி வைக்கிறது. ஒரு துரும்பை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தள்ளி வைக்கிறோம் என்றால், ஏதோ ஒரு சக்தி நமக்கு உத்தரவிட்டதன் விளைவாகத்தான் அது நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிற பக்குவமும் மனமும் இன்றைக்கும் நமக்குத் தேவை.

    இந்த மனம் கிடைத்து விட்டால், குருவருளும் திருவருளும் கூடி விடும். தியாகராஜனின் குடும்பத்துக்குக் கிடைத்த அனுகிரஹங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

    இன்னொரு முறை பிக்‌ஷாவந்தனத்தை காளஹஸ்தியில் செய்தார் தியாகராஜன். அப்போது அங்கே முகாமிட்டிருந்தார் பெரியவா. ஸ்ரீமடத்தில் இருந்து தியாகராஜனின் பிக்‌ஷாவந்தனத்துக்கென்று ஒரு தேதியைக் குறிப்பிட்டுக் கொடுத்திருந்தார்கள்.

    இவருக்கு வழங்கப்பட்டிருந்த தினத்தன்று சாம வேத உபாகர்மா. அதாவது சாம வேதக்காரர்களுக்கு அன்றைய தினம் பூணூல் மாற்றிக் கொள்ளும் ஆவணி அவிட்ட வைபவம்.

    நட்சத்திரம் அல்லது திதி சார்ந்த ஒரு வைபவம் குறிப்பிட்ட தினத்தில்தான் வரும். ஆனால், ஒரே மாதத்தில் ஒரே திதியோ அல்லது நட்சத்திரமோ இரண்டு முறை வந்தால் வைபவத்தை மேற்கொள்கிறவர்கள் சற்றுக் குழம்பிப் போவார்கள் - மாதத்தின் முதல் நாளில் இதை அனுஷ்டிக்க வேண்டுமா, அல்லது கடைசி நாளில் அனுஷ்டிக்க வேண்டுமா என்று!

    சமீபத்தில் மகா சிவராத்திரி இது போல் வந்தது. பஞ்சாங்கத்தில் ஒரே மாதத்தில் இரு முறை குறிப்பிடப்பட்டிருந்தது.

    சில ஆலயங்களில் முதலில் வரும் மகா சிவராத்திரியைக் கொண்டாடினார்கள். இன்னும் சில ஆலயங்களில் பின்னால் வரும் தேதியில் கொண்டாடினார்கள்.

    அதுபோல் தியாகராஜன் காளஹஸ்தியில் பிக்‌ஷாவந்தனம் செய்ய வேண்டிய சாம உபாகர்மா தினம் அந்த மாதத்தில் இரு முறை வந்தது. அதாவது, மாதத்தில் துவக்கத்தில் ஒன்றும், இறுதியில் இன்னொன்றுமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    காஞ்சி ஸ்ரீமடத்தில் தியாகராஜனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது மாதத்தில் முதலில் வரும் தினம்.

    ஆனால், தியாகராஜன் தன் மனதுக்குள் குறித்துக் கொண்டது இரண்டாவதாக வரும் தினம்.

    'முதலில் வரும் தினம்தான் என்பதை தியாகராஜன் புரிந்து கொண்டிருப்பார்' என்று நினைத்து ஸ்ரீமடத்தில் இருந்து தகவல் சொல்லவில்லை.

    'இரண்டாவது வரும் தினத்தைதான் ஸ்ரீமடத்தினர் குறித்து வைத்திருப்பார்கள்' என்று தியாகராஜனும் நம்பிக் கொண்டிருந்தார்.

    குழப்பமாக இருக்கிறதுதானே!

    அதுதான் நடந்தது. என்ன ஆயிற்று?

    (தொடரும்) swami1964@gmail.com

    Next Story
    ×