search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆறுமனமே ஆறு- இனி அமிர்தமே தருவோம்!
    X

    பிரபு திலக்


    ஆறுமனமே ஆறு- இனி அமிர்தமே தருவோம்!

    • எதிர்காலத்துல அந்தக் குழந்தைக்கு தொற்றா நோய்னு சொல்லப்படுற உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் இதெல்லாம்கூட ஏற்படாது.
    • கொரோனா காலத்துல தாய்களைப் பறிகொடுத்த பல குழந்தைகளை இந்த மாதிரியான தாய்ப்பால் வங்கிகள்தான் காப்பாத்தியிருக்கு.

    `இரண்டு வயதுக்குப் பிறகும் தாய்ப்பால் குடிக்கும் வாய்ப்பு பெற்ற குழந்தை, அதிர்ஷ்டமுள்ள குழந்தை.' - அமெரிக்க குழந்தைநல மருத்துவர் எவெரெட் கூப்.

    நண்பர்களே... `ஆகஸ்ட் 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரைக்கும் உலகத் தாய்ப்பால் வாரம்ங்கறது உங்களில் பலருக்கும் தொிஞ்சிருக்கும். `ஆமா... சாலை பாதுகாப்பு வாரம், தடுப்பூசி வாரம்னு என்னென்னவோ திட்டங்கள்... அது மாதிரி இதுவும் ஒண்ணு'ன்னு நாம இதைக் கடந்து போயிட முடியாது. `இன்னிக்கி தமிழ்நாட்டுல 6 வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில ஊட்டச்சத்துக் குறைபாடு அதிக அளவுல காணப்படுது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமா தமிழ்நாட்டை மாத்தணும்னா தாய்ப்பால் அவசியம். அதனால, `ஊட்டச்சத்தை உறுதி செய்' அப்படிங்கிற திட்டத்தை அரசு முன்னெடுத்திருக்கு.

    பிறந்து ஆறு மாதங்கள் வரைக்கும் தாய்ப்பாலை மட்டுமே உணவா எடுத்துக்கிற குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கும். எதிர்காலத்துல அந்தக் குழந்தைக்கு தொற்றா நோய்னு சொல்லப்படுற உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் இதெல்லாம்கூட ஏற்படாது.

    தாய்ப்பால் குடிக்கிறதுனால குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி (I.Q), உணர்ச்சித்திறன் (E.Q) இதெல்லாம் சிறப்பாக இருக்கும். எனவே, எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கிறதை உறுதி செய்யணும். அவ்வளவும் உண்மைதானா... தாய்ப்பாலுக்கு அவ்வளவு சக்தி இருக்கான்னு யாராவது சந்தேகத்தோட கேட்டா, `ஆமாம்'னு அழுத்தமா சொல்லுது மருத்துவ உலகம்.

    தாய்ப்பாலோட அருமையை உணர்ந்ததாலதான் உலகத்துல இருக்குற பல நாடுகள்ல தாய்ப்பால் வார விழாவை ரொம்ப சிறப்பா கொண்டாடுறாங்க. ஒரு அம்மா, தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்குறதுனால என்னென்ன நன்மைகள் கிடைக்கும்னு மருத்துவம் சொல்றதை கொஞ்சம் பார்த்துடலாம்.

    முதல்ல டாக்டர்கள் சொல்ற முக்கியமான அட்வைஸ் என்ன தெரியுமா... `குழந்தை பிறந்து ஒரு வருஷம் வரைக்கும் தாய்ப்பால் கொடுங்க'ங்கறதுதான். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்குறதால வர்ற நன்மைகள் கொஞ்ச நஞ்சமில்லை. தாய்ப்பால் கொடுக்குற அம்மாவுக்கு சினைப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் இதெல்லாம் வர்றதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மின்னு சொல்லுது பல ஆய்வு முடிவுகள். ஒபிசிட்டின்னு சொல்லப்படுற உடல்பருமன், மன அழுத்தம் இதெல்லாம் ஏற்படுறதுக்கான வாய்ப்புகளும் குறையுதாம்.

    இதை விடுங்க... அம்மா, குழந்தைக்குப் பால் புகட்டுறப்போ அவங்க உடம்புல `ஆக்ஸிடோசின்'ங்கிற ஹார்மோன் சுரக்குமாம். இதை `அன்பான ஹார்மோன்'னு வர்ணிக்கி றவங்களும் உண்டு. இதனால குழந்தைக்கும் அம்மாவுக்குமான நெருக்கமும் அன்பும் பெருகும்னு கண்டுபிடிச்சிருக்காங்க ஆய்வாளர்கள். அதோட அம்மாவுக்கு அமைதியான ஒரு மனநிலையை இது தரும்னு சொல்றாங்க.

    தாய்ப்பால்ல எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் இருக்கு. ஆன்டி பாடீஸ், செரிமானத்துக்கு உதவுற என்சைம்கள்னு பல முக்கியமான பொருட்கள் இதுல இருக்கு. இதெல்லாம் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்; குழந்தையின் செரிமான மண்டலத்தையும் மேம்படுத்தும். தாய்ப்பால்ல முந்நூற்றுக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இருக்கு. தாய்ப்பால் கொடுக்குறது, தாயின் உடல் எடை குறையவும் உதவும். இதன் மூலமா சுமார் 300-ல் இருந்து 500 கலோரிகள் வரை எரிக்கப்படுது.

    இன்னும் தாய்ப்பால் குடிக்கிற குழந்தைக்கு சுவாசப்பாதை நோய்த்தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, வயிற்றுப்போக்கு இதெல்லாம் வராது; ரத்தத்துல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா இதெல்லாம் வரவே வராது; புற்றுநோய் ஏற்படுறதுக்கான வாய்ப்பையும் குறைக்கும்னு நன்மைகளை அடுக்கிக்கிட்டே போகுது மருத்துவம்.

    நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னிக்கிப் பல பெண்கள் தாய்ப்பால் கொடுக்கறதில்லை. ஒரு பக்கம் தங்களோட அழகு குலைஞ்சுடுமோங்கிற பயம். இன்னொரு பக்கம் வேலை, வாழ்க்கைச்சூழல் காரணமா தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலைமை. இப்பிடி யோசிச்சுப் பாருங்க... பிறந்து சிலமாசமே ஆன குழந்தை வீட்டுல இருக்கு. அம்மாவுக்கு வேலைக்குப் போயே ஆகவேண்டிய கட்டாயம். அந்தப் பெண்மணி என்ன செய்வாங்க? இந்த வலியை எழுத்தாளரும், கவிஞருமான அ.வெண்ணிலா ஒரு கவிதையில பதிவு செஞ்சுருக்காங்க.

    ஆபீசுக்கு வேலைக்குப் போன பெண்மணி சொல்றது போல புலம்பல் தொனியில அமைஞ்ச பழங்கவிதை அது...

    `ஆடைகளுக்குள்ளிருந்து

    தாயின் வாசம்

    சொட்டு சொட்டாய்

    கோப்புகளில் இறங்குகிறது

    அவசரமாய்

    அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து

    பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது

    பசியைத் தின்று அலறும்

    குழந்தையின் அழுகுரல்.'

    இன்னிக்கு, பெண்கள் அதிகமா பணி புாியற இடத்துலயே குழந்தைகளுக்கான "கிரஷ்" எனப்படும் காப்பகங்கள் வச்சிருக்காங்க. தாய்மாா்கள் சாியாகத் திட்டமிட்டு தங்களுடைய தாய்ப்பாலை எடுத்து பாதுகாப்பா வச்சுட்டும் போகலாம். அறிவுள்ள அதிகாாிகளும் தாய்ப்பால் கொடுத்துட்டு வர வசதியா இளந்தாய்மாா்களுக்கான பணி நேரத்தை அமைத்தும் கொடுக்கறாங்க. எனக்குத் தொிஞ்ச ஒரு பெண் பணியிடத்தில் இருந்து வந்து பால் கொடுத்துட்டுப் போக வசதியா புதுசாவே வாடகை வீட்டை மாத்திகிட்டு வந்தாங்க. இப்படி நிறைய வசதிங்க இப்ப. ஏதோ சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாத வாழ்க்கைச்சூழல் இருக்குற தாய்மார்களை விடுங்க. வாய்ப்பிருந்து, நேரமிருந்து, எல்லாச் சூழலும் சாதகமாக இருந்தும் தாய்ப்பால் கொடுக்காம விடுறது ரொம்ப தப்பு. அது குழந்தைக்கு மட்டுமில்லை, அம்மாவுக்குமே நல்லதில்லை.

    தாய்ப்பால் எவ்வளவு முக்கியம்னு உணர்ந்திருக்கும் அம்மாக்கள் இந்த உலகம் முழுக்க இருக்காங்க. ஆறேழு மாசத்துக்கு முன்னால நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். வேலூருக்குப் பக்கத்துல அரசம்பட்டுன்னு ஒரு கிராமம். அங்கே ஒரு விவசாயி. அவரோட மனைவிக்கு பிரசவவலி. சத்துவாச்சேரியில இருக்குற ஒரு ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் சேர்க்குறாங்க. ஆண் குழந்தை பிறக்குது. ஆனா, பிரசவத்துல அந்தப் பெண்மணி இறந்துபோயிடுறாங்க. அதனால, அந்தப் பச்சைமண்ணுக்கு தாய்ப்பாசமும் கிடைக்கல, தாய்ப்பாலும் கிடைக்கல.

    அந்த விவசாயி, அவரு வளர்த்துக்கிட்டு இருக்குற ஆடு, மாடுகளை அப்பப்போ வேலூர்ல இருக்குற அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயி, என்ன ஏதுன்னு பார்த்து சிகிச்சை கொடுப்பார். அப்பிடி ஒரு தடவை போனப்போ, அங்கே இருந்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர்கிட்ட அழுது புலம்பியிருக்கார். `ஐயா... என் மனைவி இறந்துட்டாங்க... பச்ச மண்ணு தாய்ப்பால் இல்லாமதவிக்கு துய்யா...'ன்னு கண்கலங்கி சொல்லி இருக்கார்.

    வீட்டுக்கு வந்த டாக்டர் ரவிசங்கர், தன்னோட மனைவி சந்தியாகிட்ட இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கார். இவங்களுக்கு ரெண்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. சந்தியா, தன் கணவர்கிட்ட `அந்தக் குழந்தையைப் பார்க்கணும்'னு சொல்லி இருக்காங்க. ரெண்டு பேரும் அந்த விவசாயி வீட்டுக்குப் போய் அந்தக் குழந்தையைப் பார்த்திருக்காங்க. குழந்தை போதுமான ஊட்டச்சத்து இல்லாம, உடல் எடை குறைஞ்சுபோய் துவண்டுபோய் கிடந்திருக்கு. பதறிப்போனாங்க சந்தியா.

    உடனே தன் கணவர்கிட்ட, `இந்தக் குழந்தைக்கு நானே தாய்ப்பால் கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்க. அவரும் மகிழ்ச்சி அடைஞ்சிருக்காா். அவ்வளவுதான்... வாரத்துக்கு ஒரு தடவை 25 கிலோமீட்டர் பயணம் செஞ்சு, அந்தக் குழந்தைக்கு மூணு, நாலு மாசம் தாய்ப்பால் கொடுத்திருக்கார் சந்தியா. ஒரு அம்மா, உலகத்துல இருக்குற எல்லா குழந்தைகளுக்கும் அம்மாங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்.

    தாய்ப்பால் வங்கின்னு ஒண்ணு இருக்கு. அது நிறைய பேருக்குத் தெரியற தில்லை. சென்னை, எக்மோர்ல இருக்குற அரசு மகப்பேறு மருத்துவமனையில அப்படி ஒரு தாய்ப்பால் வங்கி இருக்கு. வாலன்டியரா சில தாய்மார்கள், தாய்ப்பாலை அந்த வங்கியில கொடுத்துட்டுப் போவாங்க. சிசேரியன்ல குழந்தை பெத்த சில தாய்மார்களுக்கும், வேற சில குறைபாடுகள் உள்ள சில அம்மாக்களுக்கும் தாய்ப்பால் சுரக்காது. அதேபோல பிறந்தப்பவே சில குழந்தைகளை இன்குபேட்டர்ல வெச்சு பாதுகாக்கவேண்டியிருக்கும். அந்தப் பச்சிளம் குழந்தைங்க தாய்ப்பால் இல்லாம கஷ்டப்படக் கூடாது இல்லையா... அவங்களுக்கு இந்த தாய்ப்பால் வங்கியில இருந்து பால் கொடுத்துவிடுவாங்க. கொரோனா காலத்துல தாய்களைப் பறிகொடுத்த பல குழந்தைகளை இந்த மாதிரியான தாய்ப்பால் வங்கிகள்தான் காப்பாத்தியிருக்கு.

    குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள்ள தாய்ப்பால் கொடுத்துடணும்னு சொல்லுது மருத்துவம். அப்படிக் கொடுக்குறதுனால, பிறந்த குழந்தையின் இறப்பைத் தடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்குறதுனால முக்கியமான ஒரு நன்மையும் இருக்கு. ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டா, குழந்தைக்கு அறிவுத்திறன் குறைபாடு ஏற்பட்டு, பின்னாட்கள்ல படிக்கிறதுலகூட பிரச்சினை வரலாம். இதைத் தவிர்க்கிறதுக்கு தாய்ப்பால் கொடுக்குறது அவசியம். `தாய்ப்பால் கொடுக்காததுனால 45 சதவீத குழந்தைகள் இறந்துபோறாங்க'ன்னு யூனிசெப் அமைப்போட பிரதிநிதி தீபக்ராஜ், 2019-ம் வருஷம் ஒரு கருத்தரங்கத்துல சொன்னார். அது இன்னைய தேதிக்கு அதிகமாகி இருக்கும்னுதான் தோணுது.

    அதே வருஷம் யூனிசெப் நடத்துன ஒரு ஆய்வுல, `அஞ்சுல மூணு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கிறதில்லை'ன்னு தெரியவந்திருக்கு. தமிழ்நாட்டுல எல்லா அரசாங்கங்களும் தாய்ப்பால் கொடுக்கச் சொல்லி தாய்மார்களை வலியுறுத்திக்கிட்டே தான் இருக்கு. பஸ் ஸ்டாண்டுல தாய்மார்கள் குழந்தைக்குப் பால் கொடுக்குறதுக்குன்னு தனியா அரசாங்கம் ஒரு அறையையே உருவாக்கிக் கொடுத்திருக்கு. பல பொிய கம்பெனிகள், மால்கள், கடைகள், ரயில் நிலையங்கள்னு பல இடங்களிலே இந்த மாதிாி வசதி செஞ்சு கொடுத்துருக்காங்க. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் இளம் பெற்றோா்கள் இதை விசாாிச்சு வச்சிக்கலாம்.

    `தாய்ப்பால் முக்கியம்தான்... அது எங்களுக்கும் தெரியும்'னு சொல்ற படிச்ச பெண்களே, தங்களுக்குன்னு வரும்போது, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்குறதுதான் ஏன்னு புரியலை. தாய்ப்பால் கொடுக்குறதுனால ஒரு பெண்ணின் உடற்கட்டோ, அழகோ குலைஞ்சு போயிடாதுங் கறதுதான் யதார்த்தம். குழந்தைக்கு தாய்ப்பால் தருவது கடமை அல்ல, பெருமை. தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க அதிகமாகச் சுரக்கும், குறையாது என்பதுதான் உண்மை. ஒண்ணே ஒண்ணை மட்டும் நினைவுல வெச்சுக்குவோம் நண்பர்களே...`பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலுக்கு நிகரான உணவு இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. ஏன்னா, அது பாலில்லை சாட்சாத் அமிர்தம்!''

    தொடர்புக்கு -

    drpt.feedback@gmail.com

    Next Story
    ×