search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இன்று சர்வதேச யோகா தினம்: உடலுக்கு யோகா- உள்ளத்துக்கு தியானம்
    X

    இன்று சர்வதேச யோகா தினம்: உடலுக்கு யோகா- உள்ளத்துக்கு தியானம்

    • ஒரு மனிதன் யோகாசனத்தை பயின்றால் அவனது பண்புகள் மாறிவிடும்.
    • பேராசைப்படாமை, பொறாமைபடாமை, கோபப்படாமை போன்ற குணங்களுடன் மனிதன் வாழ வேண்டும்.

    உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் உடல் ஆரோக்கியமாகவும், உள்ளம் அமைதியாகவும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் நோயும் மனக்கவலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    எதனால் நோய் வருகின்றது. அது ஏன் பெருகிக்கொண்டே செல்கின்றது. நோயின்றி வாழ என்ன வழி என்று மனிதன் சிந்தித்துப் பார்க்க தவறிவிட்டான். சிந்தித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதுதான் யோகக்கலையாகும். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும் ஆரோக்கியமாக வாழ அழகான நெறிமுறைகளை யோகத்தந்தை பதஞ்சலி மகரிஷி அஷ்டாங்க யோகம் என்று எட்டு படிகளில் அழகாக அக்காலத்தில் வடிவமைத்துள்ளார். இதனை நாம் வாழ்வில் கடைபிடிக்க முயன்றாலே போதும் வாழ்க்கை வளமாக இருக்கும். நலமாக இருக்கும்.

    அஷ்டம் என்றால் எட்டு. இதில் முதல் இரண்டு படிகள் மன ஒழுக்கம். இந்திரிய ஒழுக்கம், மனதால் எப்படி நல்ல எண்ணங்களுடன் வாழ்வது ? பிறருக்கு மனதால், வாக்கால், செயலால் துன்பம் விளைவிக்காமல் எப்படி வாழ்வது?

    பேராசைப்படாமை, பொறாமைபடாமை, கோபப்படாமை போன்ற குணங்களுடன் மனிதன் வாழ வேண்டும். சுருங்கச் சொன்னால் நமது எண்ணம், சொல், செயல் நமக்கும் தீங்கு விளைவிக்ககூடாது. மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ வேண்டும், இதுதான் இயமம், நியமம், என்ற இரண்டு முக்கிய படிகள் ஆகும். இதுதான் கடினமான ஒரு பயிற்சியாகும். இதில் வெற்றி பெற்றாலே முழுமையான ஆரோக்கியத்தை நோக்கி நாம் சென்றுவிடலாம்.

    இன்றைய பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்வில் இயமம், நியமம் இரண்டுமே முழுமையாக இல்லாத காரணத்தினால் தான் மனதளவில் பலவகையான பிரச்சினைகள் நிறைய மனிதர்களுக்கு உள்ளது. அது உடல் குறையாகவும் மாறியுள்ளது. நோயாகவும் மாறுகின்றது. எனவே மனிதர்கள் ஒவ்வொருவரும் மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வாழ முதலில் மன ஒழுக்கத்தையும், புலன் அடக்கத்தையும் பயில்வது மிகவும் அவசியமாகும்.

    நமது தேவை வேறு, ஆசை வேறு, பேராசை வேறு, நமது தேவைகள் பூர்த்தியானால் போதும் என்று வாழ்பவனுக்கு நோய் வராது. ஆசைகளை பூர்த்தி செய்ய நினைப்பவன் அல்லல்படுவான். பேராசைகள் பூர்த்தி செய்ய நினைப்பவன் பேரழிவை அடைவான் என்பதுதான் சான்றோர் வாக்கு .

    உண்ண உணவு தேவை, சாதாரணமாக காலை உணவுக்கு இட்லி போதும். ஒரு சட்னி போதும். இது தேவை.நாம் ருசியாக சாப்பிட ஆசைப்பட்டு பல விதமான பதார்த்தங்களை காலை சிற்றுண்டிக்கு சாப்பிடுகிறோம். பின்பு அஜீரண கோளாறு. வாயு பிரச்சினை என்று அல்லல் படுகின்றோம்.

    நமது வருமானம் குறைவு, ஆனால் மிகப்பெரிய ஓட்டலில் வருமானத்திற்கு அதிகமாக சாப்பிடுகின்றோம். அதனால் கடன் வாங்கும் நிலை ஏற்படுகின்றது. கடன் பேரழிவை தருகின்றது. இது ஒரு சிறிய உதாரணம்தான். இதனை இயம, நியம ஒழுக்கத்தில் நாம் சரி செய்து விடலாம்.

    மூன்றாவது படி தான் ஆசனம். ஆசனம் என்றால் நிலையான இருக்கை. இதன் மூலம் உடலை பல வகைகளில் வளைத்து அதன் மூலம் உடல் உறுப்புக்களை திடமாக, வளமாக, நோயின்றி 120 வருடம் வரை மனிதன் வாழலாம். எளிமையான ஆசனங்கள் குழந்தை பருவத்திலேயே பயின்றால் வாழ்வு வளமாக இருக்கும். மனிதனின் ஆரோக்கியம் அவன் முதுகுத்தண்டை சார்ந்து தான் உள்ளது. முதுகுத்தண்டு திடமாக இருந்தால் தான் வாழ்வு வளமாகும். அதற்கு யோகாசனம் பயன்படுகின்றது.

    ஒரு மனிதன் யோகாசனத்தை பயின்றால் அவனது பண்புகள் மாறிவிடும். அதாவது எதிர்மறை எண்ணங்கள் வளர்ந்து கொண்டே வரும், எனவே நம்மிடமுள்ள தீய எண்ணங்களை மாற்றி நல்ல பண்புகள் வளர்வதற்கு யோகாசனம் ஒரு அருமையான கவசமாக நமக்கு அமைகின்றது.

    ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று வகையான குணங்கள் உள்ளன, தமோ குணம், ரஜோ குணம், சத்வ குணம் உள்ளன. இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் மனிதன். ஒவ்வொரு மனிதரிடமும் இதில் எதாவது ஒன்று உயர்ந்து நிற்கும்.

    தமோ குணம்:இது மட்டமான அதிர்வலை–யாகும். சோம்பல், பொறாமை, பேராசை, கோவம், பிறரை மதிக்காமலிருத்தல், பிறர் பொருளுக்கு ஆசைப்படுத்தல் முதலிய பண்புகள் தமோ குண அதிர்வலைகள்.

    ரஜோ குணம்:சுறுசுறுப்பு, உற்சாகம், நல்லதே செய்தல், சற்று டாம்பீகமாக இருந்தாலும், நல்லதே செய்வார்கள் இது ரஜோ குண அதிர்வலைகளாகும்.

    சத்வ குணம்: அகிம்சை,அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், எல்லோரையும் நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புடைய அதிர்வலைகள்.

    யார் ஒருவர் யோகாசனம் செய்கின்றாரோ அவர்களுக்கு உடலில் தமோ குணம் அதிர்வலைகள் இருந்தால் படிப்படியாக குறைந்து ரஜோகுண பண்புகள் நல்ல பண்புகள் வளரும். தொடர்ந்து பயிற்சி செய்தால் சத்வகுண அதிர்வலைகளாக மாறி மனிதன், மாமனிதனாக உயரலாம். எனவே இன்றைய காலத்தில் யாரும் அறிவுரைகளை ஏற்க விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாசனங்களை செய்தால் போதும், அவர்களிடமுள்ள தீய பண்புகள் மாறி சிறந்த மனிதனாக நற்பண்புடைய மனிதனாக மாற்றுவது யோகாசனமாகும்.

    நமது உடலில் கழிவுகள் நான்கு விதமாக வெளியேற வேண்டும். சிறுநீராக, மலமாக, வியர்வையாக , கார்பன்டை ஆக்சைடாக. இந்த கழிவுகள் சரியாக வெளியேறினால் நமக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யார் ஒருவர் யோகாசனம் செய்கின்றாரோ அவர்கள் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். ஆரோக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    யோகாசனங்களை முறையாக கற்க குருவின் மேற்பார்வையில் பயிலுங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும். யோகாசனம் செய்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் கோனாடு சுரப்பி, அட்ரீனல் சுரப்பி, பாங்க்ரியாஸ் சுரப்பி, தைமஸ் சுரப்பி, தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, பினியல் சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியான விகிதத்தில் சுரக்கும், அதனால் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழலாம்.

    நீரழிவு, ரத்த அழுத்தம், மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி, மூலம், அல்சர் போன்ற நோய் வராமல் வாழ யோகாசனம் பயின்றால் மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். நீரழிவு, ரத்த அழுத்தம் எல்லாம் பரம்பரை வியாதி என்று சொல்கிறோம். யோகாசங்களை முறையாக தினமும் பயின்றால் பரம்பரை வியாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

    படிக்கும் பள்ளி மாணவர்கள் அவசியம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். செய்தால்

    • ஞாபக சக்தி அதிகரிக்கும்

    • மன அழுத்தம் நீங்கும்

    • கோபம் குறையும்

    • பொறுமை, நிதானம் பிறக்கும்

    • தன்னம்பிக்கை அதிகமாகும்

    • எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்

    • நேர்முகமான எண்ணங்கள் வளரும்

    • பெரியவர்கள் மதிப்பார்கள்

    • பிற்கால வாழ்க்கை ஆரோக்கியமாக அமையும்

    • சமுதாயத்தில் சிறந்த பண்புள்ள

    தலைவனாக உருவாகுவார்கள்

    மாணவர்கள், பத்மாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம், பச்சி மோஸ்தாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், போன்ற ஆசனங்களை முறையாக தக்க ஆசானிடம் பயின்று பலன் அடையுங்கள்.

    பெண்களுக்கு நன்மைகள்

    பெண்களுக்கு யோகாசனத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன

    • மாதவிடாய் பிரச்சினை தீரும்

    • மாதவிடாய் சரியாக வரும். அதிக உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் சரியாகும். மன அழுத்தம் நீங்கும்

    • இடுப்பு வலி, எலும்பு தேய்மானம் வராது

    • உடல் பருமன் குறையும்

    • தைராய்டு பிரச்சினை சரியாகும்

    • கருப்பை நன்கு இயங்கும்

    • சுகப்பிரசவம் உண்டாகும்

    • இளமையுடன் வாழலாம்

    குடும்பத்தில் நன்மைகள்

    குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள், தாத்தா, பாட்டி இருக்கலாம். இன்று பெரும்பாலான குடும்பத்தில் அனைவரும் மருத்துவரிடம் சென்று தொடர்ந்து BP மாத்திரை, சுகர் மாத்திரை என்று மாதம் வருமானத்தில் பெரும்பங்கு மருத்துவத்திற்கு செலவழிக்கின்றனர். முறையாக அவர்களுக்கு உகந்த எளி மையான யோகாசனங்கள் செய்தால் நிச்சயமாக மாத்திரை சாப்பிடாமல் வாழலாம். மருத்துவ செலவு மிச்சமாகும். மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.

    ஒரு குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படும். மன அமைதி குறையும். பணம் ஒரு பக்கம் செலவாகும், மறுபக்கம் மன அழுத்தம் அதிகமாகும். எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எளிமையான யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்து நோயின்றி ஆனந்தமாக வாழுங்கள்.

    உங்களது, உடல் நிலை, வயது, உடலில் உள்ள வியாதியின் தன்மைக்கேற்ப தக்க குருவிடம் யோகக்கலைகளை பயின்று வளமாக வாழ இந்த சர்வதேச யோகாசன நாளில் சபதம் எடுத்து செயல்படுத்துங்கள்.

    யோகாசனங்களை காலை 4 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளும் பயிலுங்கள். மதியமும் சாப்பிடும் முன் 12 மணி முதல் 1 மணிக்குள் செய்யலாம். பொதுவாக அதிகாலையில் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும்.

    காலை எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நல்ல காற்றோட்டமுள்ள சுத்தமான இடத்தில் தரையில் ஒரு மேட், விரிப்பு விரித்து நிதானமாக பயிற்சி செய்ய வேண்டும்.

    ஆண்கள் டீ சர்ட், தளர்வான பேண்ட் , பெண்கள் சுடிதார் டீ சர்ட், அணிந்து பயிற்சி செய்யவும். கண்ணாடி அணிந்து, செல்போன் பையில் வைத்து, இறுக்கமான உடையணிந்து செய்யக்கூடாது

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி செய்யக் கூடாது. கருவுற்ற பெண்கள் இரண்டு மாதம் வரை செய்யலாம். அதன்பின் தக்க ஆசானின் அறிவுரைப்படி பயிற்சி செய்யலாம்.

    காலையில் யோகாசனங்கள் செய்து விட்டு பத்து நிமிடம் கழித்து குளிக்கலாம். அல்லது குளித்துவிட்டு யோகாசனங்கள் செய்யலாம். எதாவது ஒன்றை கடைபிடியுங்கள்.

    எண்ணெய் தேய்த்து குளித்த அன்று யோகாசனங்கள் செய்ய வேண்டாம். காய்ச்சல், தலைவலி, இரவு தூக்கமில்லை என்றால் மறு நாள் யோகாசனம் செய்ய வேண்டாம்.

    யோகாசனங்கள் செய்து முடித்து இறுதியில் சாந்தி ஆசனம் செய்து நிறைவு செய்யுங்கள்.

    யோகாசனம் என்பது நமது உடலை ஆலயமாக்கி அதில் உள்ள ஐந்து அடுக்குகளில், ஒவ்வொரு அடுக்கையும் சுத்தமாக்கி ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்ம உயிர் சக்தியை உணர்வதற்கு பயன்படுகின்றது. யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. உடல், மனதை ஆத்மாவுடன் இணைக்கும் தெய்வீக கலையாகும். நமது உடம்பில் ஐந்து அடுக்குகள் உள்ளன.

    முதல் அடுக்கு - அன்னமய கோசம்

    இரண்டாவது அடுக்கு - பிராணமய கோசம்

    மூன்றாவது அடுக்கு - மனோமய கோசம்

    நான்காவது அடுக்கு - விஞ்ஞானமய கோசம்

    ஐந்தாவது அடுக்கு - ஆனந்தமய கோசம்

    இந்த உடலில் ஐந்தாவது அடுக்கில் தான் இறை சக்தி உயிர்சக்தி மறைந்துள்ளது. யோகப்பயிற்சிகள் செய்பவர்களுக்கு ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்தி இறையாற்றல் உடல் முழுவதும் நன்கு பரவி எல்லா அடுக்குகளில் உள்ள குறைகளை நீக்க வல்லது.

    இன்று சமுதாயத்தில் நீரழிவு, ரத்த அழுத்தம் கேன்சர் போன்ற நோய்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. இருதய நோய் அதிகமாகின்றது. இவையெல்லாம் சரியாக வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதர்களும் யோகக்கலையை பயில வேண்டும். இதன் மூலம் மட்டுமே மேற்குறிப்பிட்ட நோய்கள் வராமல் குறைக்க முடியும்,

    தினமும் காலை 4 மணிக்கு எழுந்து விடுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு கிழக்கு நோக்கி ஒரு விரிப்பு விரித்து அமருங்கள். கை சின் முத்திரையில் வைத்து (பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணையுங்கள். மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி இருக்கட்டும்.) கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.

    பின் எளிமையான யோகாசனங்கள் ஐந்து பயிற்சி செய்யுங்கள். காலை 8 மணி முதல் 8 .30 மணிக்குள் டிபன் சாப்பிடுங்கள். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். மதியம் 12.30 முதல் 1.30 மணிக்குள் சாப்பிடுங்கள். இரவு சாப்பாடு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிடுங்கள். இரவு மட்டும் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் இருக்கட்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நல்ல தூக்கம் இருக்க வேண்டும்.

    நேரம் உள்ளவர்கள் காலை, மாலை யோகாசனம், தியானம் செய்யுங்கள். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். மூச்சில் கவனம் செலுத்துங்கள். எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள். எளிமையான வாழ்க்கை, உயர்ந்த எண்ணமுடன் வாழுங்கள்.

    நமது மு தல் உணவு காலையில் உடலுக்கு யோகா சனம், உள்ள த்தி ற்கு உணவு - தியானம், இதுவே சற்குரு சீரோ பிக்க்ஷு உடம்பிற்–கோர் மருந்து நல்ல உழைப்பு (யோ காசனம்) உள்ளத்திற்கோர் நல்ல மருந்து நல்ல நினைப்பு (தியானம்) என்றார்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×