search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அரசியல் சாசனம் அளித்த அண்ணல் அம்பேத்கர்!
    X

    அரசியல் சாசனம் அளித்த அண்ணல் அம்பேத்கர்!

    • வாய்ப்பு கிடைக்கும்போது, இந்திய சாசனத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள்; ஓர் உண்மை புரியும் - ‘இது நமக்கானது; இது நம் அனைவருக்கும் ஆனது.’
    • ‘அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள்’ - அண்ணல் அம்பேத்கர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் அழியாத சாட்சியம்.

    'இது என்னோட உரிமை... இதுல யாரும் தலையிட முடியாது.'

    'நீ யாரு என்னை கேள்வி கேட்க...? உனக்கு என்ன உரிமை இருக்கு...?'

    'இது ஒன்னும் நீ குடுத்தது இல்லை... சட்டம் சொல்லுது... சட்டம் குடுக்குது...'

    இப்படி பல பேர் சொல்லி அடிக்கடி கேட்டு இருக்கிறோம். அல்லது, நாமே இப்படி, பலமுறை சொல்லி இருக்கிறோம்.

    இந்த உரிமை...

    இந்த சட்டம்...

    இந்த சுதந்திரம்...

    இந்தப் பெருமை...

    யாரால் வந்தது?

    எது நமக்குத் தந்தது...?

    இந்தியாவின் அற்புத அடையாளம் எது...?

    சாதி மதம் இனம் மொழி மண்டலம்... அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றாய் இணைத்து வைத்திருப்பது எது?

    நமது சாசனம்!

    உலகின் மிகச் சிறந்த சாசனம் என்று புகழப்படுகிறதே... அதற்குக் காரணம் - இதனை வடிவமைத்த மகத்தான மனிதர்; உலகின் தலைசிறந்த சட்ட மாமேதை - பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர்.

    இந்தியர்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகளின் உச்சம் - இந்திய சாசனம்.

    அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியா, ஒரு சுதந்திர நாடாகத் தன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிற தருணம்..

    தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்கிற, தன் மக்களுக்கு தேவையானதை பிழையின்றி தாமதம் இன்றி வழங்க உறுதி ஏற்றுக் கொள்கிற தருணம்.

    ஏராளமான சவால்கள் சங்கடங்கள் பிரச்சினைகள் நெருக்கடிகள்... எதிரே நின்றன.

    கல்லாமை, அறியாமை, வறுமை, பிணி...

    இவற்றை எல்லாம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

    இதற்கு முதலில், இங்கே நிலவிய கொடுமையான வேற்றுமைகளைக் களைய வேண்டும். சற்றும் மனிதத் தன்மை அற்ற சமூகக் கொடுமைகள் மறைய வேண்டும்.

    இதனை சாத்தியமாக்க, முதலில், மக்களை ஒன்றுபடுத்த வேண்டும். ஒரே நோக்கில், ஒரே சிந்தனையில், ஒரே திசையில் மக்களை முன் செலுத்த வேண்டும்.

    இதற்கு ஒரே வழி - எல்லோருக்கும் நன்மை செய்கிற, எல்லோருக்கும் சம உரிமை வழங்குகிற, எல்லோருக்கும் பொதுவான சட்டம்.

    உண்மையில் அது, சட்டம் அல்ல; சாசனம்!

    இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மாபெரும் தன்னலமற்ற தலைவர்கள் ஒன்று கூடி நமக்கே உரித்தான சாசனம் வகுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

    பல கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டுக்கு சாசனம் வரைதல் அத்தனை எளிதான காரியம் அல்ல.

    இதனைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்க - ஒரு நல்ல, ஆக்கபூர்வ, ஆற்றல் மிக்க தலைமை தேவை.

    இந்த நாடு பெற்ற பேறு - அப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்தார்; வழி காட்டினார்; வழி நடத்தினார். அவர்தான் - நல்லுலகம் போற்றும் அண்ணல் அம்பேத்கர்.

    சட்ட அறிவு மட்டும் அன்று; சமூகத்தின் மீது மிகுந்த பற்று, மனித குலத்தின் மீது ஆழ்ந்த அக்கறை, ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமதர்ம சமுதாயத்தை அமைப்பதில் அகலாத ஆர்வம், விளிம்பு நிலை மக்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதில் கொண்டிருந்த தீவிர ஈடுபாடு...

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்திய சாசனத்தை வடிவமைக்கும் வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதில் வியப்பு ஏதும் இல்லை.

    ஒவ்வொரு வாசகமும் ஒவ்வொரு வரியும், அவ்வளவு ஏன்... ஒவ்வொரு எழுத்தும், அண்ணலின் அடிமனதில் இருந்த உயரிய மனித நன்னெறிகளை சட்ட வடிவமாய்க் கொண்டு வந்து நிறுத்தியது.

    உலக மக்களை, அனைத்து உயிர்களை, உளமார நேசிக்கிற அப்பழுக்கற்ற ஓர் உத்தமரால் மட்டுமே அனைவருக்கும் பொதுவான, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்கிற ஒரு சாசனத்தை வழங்க முடியும். இதனைத் தமது ஒப்பற்ற செயலால் நிரூபித்துக் காட்டினார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

    வாய்ப்பு கிடைக்கும்போது, இந்திய சாசனத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள்; ஓர் உண்மை புரியும் - 'இது நமக்கானது; இது நம் அனைவருக்கும் ஆனது.'

    இதனை வெறுமனே, 'அரசியல்' என்கிற கூட்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. சமூகத்தின் அத்தனை மக்களுக்கும், வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் இந்த சாசனம் கச்சிதமாகப் பொருந்தும்.

    பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களே குறிப்பிடுகிறார் - "இது ஓர் அரசியல் ஆவணம் என்பதை விடவும், ஒரு சமூக ஆவணம்." (This is more social than a Political Document)

    எனவேதான் இதனை 'அரசியல்' சாசனம் என்று குறிப்பிட சற்று அச்சம் ஏற்படுகிறது. இது உண்மையில் 'மக்கள் சாசனம்' என்று அழைக்கப்படுவதே இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

    "நாம் ஆகிய இந்திய மக்கள், நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்" என்றுதானே சாசனத்தின் முகப்புரை கூறுகிறது...?

    மக்களால் மக்களுக்காக வழங்கப்பட்ட இந்த சாசனம், ஒரு சட்டம் என்பதற்கு அப்பால், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களுக்கும் தாயாக மூலமாக ஆதாரமாக விளங்குகிற ஒரு அடிப்படை சாசனம்.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம், யார் மீதும் எந்த விதத்திலும் பாகுபாடு காட்டாத அணுகுமுறை, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க, பாதுகாக்கத் தேவையான அவசிய ஏற்பாடுகள்..

    பேச, எழுத, வாழ, வணிகம் செய்ய அடிப்படை உரிமை, உயிர் வாழவும் அந்தரங்க வாழ்க்கைக்குமான உத்தரவாதம், சாசனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்போது ஒரு சாமானியனும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிகிற உரிமை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர்-காந்திய சிந்தனையாளர்

    இன்று நாம் எத்தனை 'பொது நல வழக்குகள்' பார்க்கிறோம்...? இதற்கெல்லாம் வழிகோலியது - சாசனத்தின் பிரிவு 32 தருகிற அடிப்படை உரிமை - அண்ணலின் சிந்தனையில் உதித்த அற்புத கருத்து. இதன் நற்பயனை இன்று நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கிறோம்.

    சாசனத்தின் பாகம் நான்கு - 'அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள்' - அண்ணல் அம்பேத்கர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் அழியாத சாட்சியம்.

    மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம், சுதந்திரமாக தனித்து இயங்கும் நீதித்துறை, அரசியல் குறுக்கீடுகள் அற்ற அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட சாசன அங்கீகாரம் பெற்று அமைப்புகள், காலத்துக்கு ஏற்றவாறு அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களுக்கு இடம் தரும் திருத்தம் மேற்கொள்ள நடைமுறைகள்...

    அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உள்ளுணர்வை, உள்ளக்கிடக்கையை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறது நமது சாசனம்.

    தனது சிறு வயதில், பள்ளி நாட்களில், இளவயது கல்லூரி நாட்களில், பொது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தருணத்திலும் பாபாசாகிப் அம்பேத்கர் சந்தித்த இடர்கள் எத்தனை! எத்தனை!

    தனக்காக மட்டும் அல்லாது, ஆதிக்க சக்திகளின் கீழ் அவதியுற்று, ஆதரவற்றுக் கிடந்த அடித்தட்டு மக்கள் அனைவரின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கிற மாபெரும் சக்தியாக அண்ணல் அம்பேத்கர் உயர்ந்து நின்றார் என்றால், அதற்குப் பின்னால் அவருக்கு நேர்ந்த சோதனைகள் எத்தனை! சோகங்கள் எத்தனை!

    அத்தனையும் முறியடித்து வென்று காட்டி உலகம் போற்றும் உரிமைப் போராளியாய் சாதனை புரிந்தார் என்றால்... இது மனித குலம் முழுமைக்குமான நற்செய்தி.

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த 'அறிவுப் புரட்சி', அண்ணல் வற்புறுத்திக் கூறிய 'கல்வியில் மேம்பாடு' - மனித குலத்தின் ஆகச்சிறந்த ஆக்கபூர்வ போராட்ட வழிமுறை.

    அகன்ற கல்வி, ஆழ்ந்த அறிவு, அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கிற பேராண்மை, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் சென்று சேர்வதை உறுதி செய்யும் அரசியல் நேர்மை...

    உலகின் வேறு எந்தத் தலைவரும் முன் நிறுத்தாத, முன் கொண்டு செல்லாத மனித மாண்புகளை வலுவாக வெளிப்படுத்தி ஆழமாக நிலை நிறுத்தியதில் வெற்றி கண்டவர் - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

    நாளை டிசம்பர் 6 - அண்ணலின் நினைவு நாள்.

    சக மனிதர்களை மதிக்கிற, சக மனிதர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலுகிற அமைதிப் புரட்சிக்கு வித்திட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றுவோம். அண்ணலின் வழியில் சமத்துவம் நிலைக்கப் பாடுபடுவோம்.

    வாழ்க வளர்க அண்ணலின் புகழ்!

    Next Story
    ×