என் மலர்
புதுச்சேரி
பாகூரில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் டெபாசிட் செய்த 10 ரூபாய் நாணயங்களை காசாளர் வாங்க மறுத்துள்ளார். இதுகுறித்து முறையிட்ட போது வங்கி மேலாளரும் அதனை ஆமோதித்துள்ளார். மற்ற வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும். தடையின்றி வாங்கிக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் சில வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான கடை மற்றும் அதே வரிசையில் அடுத்தடுத்து மளிகை மற்றும் கோழிக்கடை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அந்த கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த போது, ஷட்டர்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடைக்காரர்கள் 3 பேரும் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் காரைக்கால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடை முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உடலை வளைத்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், கடை களின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து, கை வரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரைக்கால் நகர பகுதியில் பதுங்கி இருந்த ரகுமானை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்கால் அருகே திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில், ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7-ந் தேதி வழக்கம் போல், காலையில் பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த விபரம் தெரியவில்லை, பள்ளி அருகே விசாரித்ததில், சிறுமி யாரோ ஒரு நபருடன் சென்ற விபரம் அறிந்து, உடனே இதுகுறித்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில், சிறுமியை காணவில்லை. சிறுமியை யாரோ கடத்தி இருக்கலாம் என்று சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை பல்வேறு மாவட்டங்களில் தேடிவந்தனர்.
பின்னர், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலக்கிய போது அவர் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அம்பகரத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார், கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்று சிறுமியை மீட்டு காரைக்கால் கொண்டு வந்தனர்.
விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அருகே செட்டிமண்டபம் முத்தையா நகரை சேர்ந்த முபாரக் என்பவரது மகன் முஷாரப் (வயது 22) (கையில் பச்சை (டாட்டூ) குத்தும் தொழில் செய்துவருபவர்) என்பவர் சிறுமியிடம் வலைதளம் மூலம் ஏற்பட்ட நட்புமூலம் அம்பகரத்தூர் வந்து நேரடி தொடர்பை ஏற்படுத்திகொண்டார்.
பின்னர், சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகள் கூறி சென்னைக்கு கடத்தி சென்று பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில், முஷாரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
வில்லியனூர் பெரம்பை சாலையில் அரசூர் கிராமத்தில் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதுபோல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் நிர்வாகிகள் கோவில் கதவை பூட்டி விட்டு செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் அறங்காவல் நிர்வாகி முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்த போது கோவில் பின் பக்கத்தில் உள்ள இரும்பு கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி நெற்றியில் இருந்த 4 கிராம் போட்டு ஆகியவற்றை திருடி சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப் பட்டு வருகிறது. ஏற்கனவே 2-ம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற மாணவர்கள் கடந்த 12-ந் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேர்ந்தனர். இதற்கிடையே மத்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நீட் நுழைவுத்தேர்வில் பொதுப்பிரிவினர் 35 சதவீதம் (247 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். இதேபோல் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 25 சதவீதம் (210 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் 30 சதவீதம் (229 மதிப்பெண்கள்) பெற்றால் போதும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து விருப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் வருகிற 18-ந் தேதி வரை சென்டாக் இணைய தளத்தில் (www.centacpuducherry.in) சென்று பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.
மேற்கண்ட தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.






