search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போட்டி போட்டு கோஷமிட்ட எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள்: பாராளுமன்றம் திங்கட் கிழமை வரை ஒத்தி வைப்பு
    X

    பாராளுமன்றம்

    போட்டி போட்டு கோஷமிட்ட எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள்: பாராளுமன்றம் திங்கட் கிழமை வரை ஒத்தி வைப்பு

    • விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
    • சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தல்.

    பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இதுவரை இரு அவைகளிலும் சேர்த்து 27 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை மக்களவைக் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

    இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். எனினும் அமளி நீடித்த நிலையில் அவை நடவடிக்கை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய நிலையில் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கு பதிலடியாக குடியரசுத் தலைவர் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் உறுப்பினருக்காக சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினார். இரு தரப்பும் பதிலுக்கு பதில் கோஷமிட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.


    Next Story
    ×