search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    12 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?- மத்திய மந்திரி தகவல்
    X

    மன்சுக் மாண்டவியா

    12 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?- மத்திய மந்திரி தகவல்

    • இந்தியாவில் 13 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 9 லட்சம் பேர் தங்களை தத்தெடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
    • உக்ரைனில் மருத்துவ படிப்பினை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்கள், இந்தியாவில் தங்களது படிப்பினை தொடர முடியாது.

    சென்னை:

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் காணொலிக்காட்சி மூலமாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலக சுகாதார அமைப்பு 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்துள்ள இலக்கில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

    காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகளின் மூலம் நமது நாட்டில் இருந்து ஒழித்துவிடலாம். காச நோயாளிகளுக்கு சத்துணவு, மருத்துவ சிகிச்சைக்கான மருந்து, தொழில்சார்ந்த உதவிகள் செய்யும் வகையிலான தத்தெடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 13 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 9 லட்சம் பேர் தங்களை தத்தெடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேரை அரசு சாரா அமைப்புகள், தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள் தத்தெடுத்துள்ளனர். மீதம் உள்ள காச நோயாளிகளும் விரைவில் தத்தெடுக்கப்படுவார்கள்.

    தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் மூலமாக சத்தான உணவு, மருந்துகள் தொடர்ச்சியாக கிடைக்கும்போது காச நோயில் இருந்து விரைவில் குணம் அடைந்துவிடுவார்கள். கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி 17-ந்தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் (அக்டோர்) 2-ந்தேதி வரை நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளது.

    உக்ரைனில் மருத்துவ படிப்பினை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்கள், இந்தியாவில் தங்களது படிப்பினை தொடர முடியாது. மருத்துவ படிப்பினை நிறைவு செய்துவிட்டு வந்த மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் மருத்துவ பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

    12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நிபுணர்கள் குழு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்த உடன் தடுப்பூசி செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசு தகவலின்படி, தமிழகத்தை பொறுத்தவரையிலும் 50 ஆயிரத்து 788 பேர் காச நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 1,680 பேர் தத்தெடுக்கும் திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோல புதுச்சேரியில் 907 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 651 பேர் தங்களை தத்து, கொடுக்க முன்வந்துள்ளனர்.

    Next Story
    ×