search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 5-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதி

    திருமலை திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளை சீரமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கூறினார்.
    திருப்பதி:

    திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரண பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5ந்தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.3.60 கோடியில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும்.

    அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும்.

    மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டுவதற்காக மகாராஷ்டிர அரசு 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கி உள்ளது.

    அரசு வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.அங்கு ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் சிங்கானியா கோவில் கட்ட முன்வந்துள்ளார்.

    திருப்பதியில் ரூ.20 கோடியில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி கட்டப்படும். சீனிவாச சேது பாலத்தின் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளது. அந்த பாலத்தை 5ந் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து 2வது கட்டமாக பாலம் கட்டும் பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணி வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    நிபுணர்களின் பரிந்துரைப்படி திருப்பதி மலைப்பாதையை பலப்படுத்த 2வது கட்டமாக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளை சீரமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    திருமலை பாலாஜி நகரில் 2.86 ஏக்கரில் மின்சார பஸ் நிலையம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 75,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,116 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    Next Story
    ×