search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    2 டோஸ் செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம்

    கொரோனாவால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவில் மிக குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
    புனே:

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் பிரக்யா டி. யாதவ், கஜனன் என்.சப்கல், ரீமா ஆர். சகாய் மற்றும் சில மருத்துவர்கள், உருமாறிய ஒமைக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் முடிவில் ஒமைக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தெரியவந்தது. 

    இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கூறியதாவது:-

    ஒமைக்ரான் உருமாறிய வகை வைரஸ், அதன் முள் பகுதியில் மிக அதிகமாக உருமாற்றங்களுக்கு உள்ளாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெல்டா உள்ளிட்ட மற்ற கொரோனா வகைகளால் பாதிக்கப்பட்டு மீண்ட நோயாளிகளின் உடல்களில் ஏற்பட்டு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து ஒமைக்ரான் எளிதாக தப்பித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்த ஆய்வுக்காக கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி 180 நாட்களை நிறைவு செய்த 24 பேரின் ரத்த மாதிரிகளும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அதன்பிறகு 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 17 பேரின் ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 46 பேரின் ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    அதில் இந்த 3 பிரிவினருக்கும் டெல்டா, பீட்டா, பி.1 வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருப்பதும், அதேநேரத்தில் உருமாறிய ஒமைக்ரானுக்கு எதிராக நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.

    கொரோனாவால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவில் மிக குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த செறிவு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அதன்பிறகு 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் செறிவு 11.28 என்ற அளவிலும், கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 26.25 என்ற அளவில் கூடுதலாக இருப்பதும் தெரிய வந்தது.

    பிஏ-1 ஒமைக்ரான், பொதுமக்களின் உடலில் உருவாக்கி இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து எளிதில் தப்பித்து பாதிப்பை ஏற்படுத்துவது போல பிஏ-2 வகை மற்றும் தற்போதைய துணை உருமாறிய வைரஸ்களும் அந்த திறனை பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    எனவே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களில் தகுதியுள்ளவர்கள் விரைவில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.

    இவ்வாறு ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கூறியுள்ளனர்.


    Next Story
    ×