search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்ச்சி
    X
    தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்ச்சி

    73-வது குடியரசு தின விழா: தேசிய கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
    நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காலை 10.20 மணிக்கு அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு வந்தார்.

    அங்கு ஏற்கனவே மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அவரை தொடர்ந்து மெய் காப்பாளர்களின் அணிவகுப் புடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு வந்தார். அவரை குடியரசு தலைவரின் மெய்காப்பாளர்களுக்கு தலைவரான கர்னல் அனுப் திவாரி தலைமை தாங்கி அழைத்து வந்தார்.

    பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.


    ராணுவத்தின் பல்வேறு படை வீரர்கள் அணிவகுத்து வந்தன. பல்வேறு வகை பீரங்கிகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. அவை இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் வகையில் அமைந்தன. ராஜ்புத் படை பிரிவினர் ராஜ பாதையில் அணிவகுத்தனர்.

    மெட்ராஸ் ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட் வீரர்கள் கம்பீரமாக அணிவகுப்பில் பங்கேற்றனர். ஜம்மு- காஷ்மீர் மற்றும் சீக்கிய படை பிரிவுகளும் அணிவகுத்தன. சென்னை ஆவடியில் தயாரான அர்ஜூன் ரக பீரங்கியும் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டது.

    துணை ராணுவ படை வீரர்களும் கம்பீரமாக அணிவகுத்தனர். மத்திய படைகளின் வீரர்கள், தேசிய மாணவர் படையினர், ராணுவ இசை குழுவினர், விமான படை இசை குழுவினர் ஆகியோரும் அணிவகுப்பு வந்தனர்.

    பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. மேகாலயா, குஜராத், கோவா, அரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. மத்திய அரசு துறை ஊர்திகளும் இதில் பங்கேற்றன. 25 அலங்கார ஊர்த்திகள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன.

    அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்திய கேட் வரை சென்றது. முன்னதாக ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த பாபுராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி ரினா ராணி, மகன் மாணிக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வழங்கினார்.

    கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 24 ஆயிரம் பார்வையாளர்களே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    குடியரசு தின விழாவின் போது ராஜபாதையில் 75 மீட்டர் நீளமும், 15 அடி உயரமும் கொண்ட 10 ஓவியத்திரைகள் முதன் முறையாக காட்சிப்படுத் தப்பட்டன. அவை சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    கலை நிகழ்ச்சிகளை அனைவரும் சிறந்த முறையில் பார்ப்பதற்காக ராஜ பாதையின் இரு புறமும் தலா 5 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    குடியரசு தின அணிவகுப்புக்கு முன்பு ராணுவத்தினர் தொடர்பான குறும்படங்கள் முந்தைய குடியரசு தின விழா அணி வகுப்பு காட்சிகள் உள்ளிட் டவை திரையிடப்பட்டன.

    குடியரசு தின விழா கொண்டாட்டங்களை பிரசார் பாரதி நேரலையில் ஒளிபரப்பியது.

    Next Story
    ×