search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் 10 நாட்களில் ரூ.26.6 கோடி உண்டியல் வசூல்

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் ஆயிரம் பேர் பஸ் மூலம் திருப்பதிக்கு அழைத்து வந்து சொர்க்கவாசல் வழியாக இலவச தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 13-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 13-ந்தேதி முதல் நேற்று வரை 10 நாட்கள் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

    சாமானிய பக்தர்களும் 10 நாட்களுக்கு தினமும் வைகுண்ட வாசல் வழியாக தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் இலவச தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்யும் வகையில் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டன

    தரிசனம் டிக்கெட்டில் தினமும் 27 ஆயிரம் பக்தர்களும் கல்யாண உற்சவம், தோமாலை, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்கள் என தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் ஆயிரம் பேர் பஸ் மூலம் திருப்பதிக்கு அழைத்து வந்து சொர்க்கவாசல் வழியாக இலவச தரிசனம் செய்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு இருப்பிடம் லட்டு பிரசாதம் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

    சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வது நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.

    கடந்த 10 நாட்களில் வைகுண்ட வாசல் வழியாக 3,77,943 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.26.6 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×