search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
    X
    சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

    கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

    பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறையும் வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சாமிதரிசனம் செய்ய தினமும் குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது.

    மேலும் சுவாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை “நெகட்டிவ்” சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் 10ஆயிரம் பக்தர்கள் வரையே அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது மண்டல பூஜையில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும் தினமும் 15 ஆயிரம் வரையே பக்தர்கள் சபரிமலைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பிரதான ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அதிலும் பத்தினம்திட்டை மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை பெய்து வருவதாலும், காக்கி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதாலும் பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    இதனால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறையும் வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பத்தினம்திட்டை மாவட்ட கலெக்டர் திவ்யா கூறியிருப்பதாவது:-

    பத்தினம்திட்டை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பம்பை ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. காக்கி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காக்கி மற்றும் பம்பை அணைக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் பம்பை ஆற்றில் தண்ணீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (20-ந்தேதி) சபரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வராமல் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் திவ்யா கூறினார்.

    இதையும் படியுங்கள்...என்னை அன்று தடுத்து நிறுத்தினார் சந்திரபாபு நாயுடு: பெண் பாவம் பலித்துவிட்டதாக நடிகை ரோஜா கருத்து

    Next Story
    ×