search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூபேஷ் பாகல்
    X
    பூபேஷ் பாகல்

    பெட்ரோல் விலை ரூ.5 குறைத்திருப்பது லாலிபாப் போன்றது: சத்தீஸ்கர் முதல்வர் விமர்சனம்

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ள மத்திய அரசு, வாட் வரியை குறைக்கும்படி மாநில அரசுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
    சர்வதேச சந்தையில் கக்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய கரன்சியின் மதிப்பை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தன. இதனால் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்தது.

    ஆகவே, கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தது. இருந்தாலும் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான  விலை குறையவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே சென்றது. மத்திய அரசு, கலால் வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.

    கொரோனா தடுப்பூசிகளுக்காக செலவிடப்படும் பணத்தை இதன்மூலமாக பெறப்படுகிறது என சில அமைச்சர்கள் தெரிவித்தனர். இது விமர்சனத்திற்குள்ளானது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் திடீரென மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 10 ரூபாயும் குறைத்தது. மேலும், மாநில அரசுகளிடம் வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

    இந்தியா முழுவதும் 3 மக்களவை, 29 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தோல்வி எதிரொலியால் மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    ஆனால், மத்திய அரசு விலையை உயர்த்தியபோதெல்லாம், வாட் வரியை சில மாநிலங்கள் குறைத்ததால் தற்போது வாட் வரியை  குறைக்கவில்லை. கர்நாடகா போன்ற சில மாநிங்கள் வாட் வரியை குறைத்துள்ளது.

    இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மத்திய அரசின் கலால் வரி குறைப்பு குறித்து கூறுகையில் ‘‘மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசை போன்று, தற்போதை பா.ஜனதா அரசு கலால் வரியை 30-ல் இருந்து 9 ரூபாய்க்கு குறைத்தால், கட்டாயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறையும். பெட்ரோல் மீதான விலையை ரூ. 30 வரையில் அதிகரித்துவிட்டு, பின்னர் ரூ. 5 ரூபாய் குறைப்பது லாலிபாப் கொடுத்து ஏமாற்றுவது போன்றது’’ என மத்திய அரசு மீது விமர்சனம் செய்துள்ளார்.
    Next Story
    ×