search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்போம் - மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், கால வரையின்றி போக்குவரத்தை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் சுமார் ஓராண்டை எட்டி விட்டது.

    பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் போன்ற இடங்களை ஆக்கிரமித்துள்ளதால், அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த போராட்டக்களங்களை சுற்றி போலீசார் வேலி அமைத்து இருந்தனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு இந்த இடையூறுக்கு சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், கால வரையின்றி போக்குவரத்தை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றியுள்ளனர். இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட வேலிகள் மற்றும் கான்கிரீட் கட்டைகள் என அங்கே வைக்கப்பட்டிருந்த வேலிகள் அனைத்தையும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

    இதனால் அங்கு வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. டெல்லி போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    மத்திய அரசு

    இவ்வாறு டெல்லி எல்லைகளில் தடுப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது என விவசாயிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து விவசாய அமைப்பான பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி நடந்தால், நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து அவற்றை தானிய விற்பனைக்கூடங்களாக (மண்டி) மாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதை மிண்டும் உறுதி செய்துள்ளனர்.

    Next Story
    ×