search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கடப்பாவில் தங்கையை கொன்ற தாயை வெட்டி கொன்ற மகன்

    கடப்பாவில் செல்போனில் கேம் விளையாடிய மகளை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை கண்ட மகன் தாயை வெட்டிக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா நாகாஷ் தெருவை சேர்ந்தவர் குர்ஷிதா (வயது53). இவருக்கு ஜமீர் (18), அலிமா (15) என ஒரு மகன், மகள் இருந்தனர். குர்ஷிதா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    அலிமாவுக்கு செல்போனில் கேம் விளையாடும் பழக்கம் இருந்தது. எப்போதும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை தாய் குர்ஷிதா பலமுறை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் அலிமா செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த குர்ஷிதா மகள் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். தாய் தங்கையின் கழுத்தை இறுக்குவதை ஜமீர் பார்த்துக்கொண்டிருந்தார்.

    தாய் தங்கையை விளையாட்டாக கழுத்தை இறுக்குவதாக நினைத்துக் கொண்டார். ஆனால் சிறிது நேரத்தில் தங்கை கழுத்து தொங்கியபடி தரையில் சாய்ந்தார்.

    இதையடுத்து தங்கையின் அருகில் ஓடிய ஜமீர் அவரை எழுப்ப முயன்றார். ஆனால் தங்கை இறந்தது தெரியவந்தது.

    தங்கை இறந்ததைக் கண்ட ஜமீர் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாயின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதனால் குர்ஷிதாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலியால் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் குர்ஷிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து கடப்பா-2 டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜமீரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    கடப்பாவில் செல்போனில் கேம் விளையாடிய மகளை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை கண்ட மகன் தாயை வெட்டிக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×