search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி
    X
    பிரதமர் நரேந்திர மோடி

    முதல் மந்திரியில் இருந்து பிரதமர் வரை - 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடி

    ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடிக்கு பா.ஜ.க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    குஜராத்தின் மேசனா மாவட்டத்துக்கு உட்பட்ட வேத் நகரில் 1950-ம் ஆண்டு பிறந்த பிரதமர் நரேந்திர மோடி தனது கடின உழைப்பு மற்றும் அயராத பொது சேவை போன்றவற்றால் மாநில எல்லையை தாண்டி தேசிய அளவில் புகழ் பெறத்தொடங்கினார். இதன் காரணமாக கட்சியில் பெரிய பெரிய பதவிகள் அவரை தேடி வந்தன.

    மோடியின் தன்னிகரற்ற பணிகள் தொடர்ந்ததால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முதல் மந்திரி பதவியை எட்டிப்பிடித்தார். அந்த பதவியை பயன்படுத்தி, குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உயர்த்திக் காட்டினார்.

    இதன் விளைவு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை வழிநடத்தும் பிரதமர் பதவி அவரை தேடி வந்தது. 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக வெற்றிகரமாக நாட்டை வழிநடத்தி வருகிறார்.குஜராத்தின் சிறிய கிராமத்தில் பிறந்த இன்று சர்வதேச தலைவராக உயர்ந்து நிற்கும் பிரதமர் மோடி, 

    குஜராத் மாநில முதல் மந்திரியாக கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முடி சூட்டப்பட்டார். அதன்பின், 2014 முதல் பிரதமர் பதவியில் தொடர்ந்து வருகிறார். இதன்மூலம் ஒரு ஜனநாயக அரசின் தலைவராக 20 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்துள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத்துக்கும், இந்தியாவுக்கும் மோடியின் பங்களிப்பை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

    பிரதமர் மோடி

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு புதிய பொறுப்பை பெற்றுக்கொண்டேன். எனது மக்கள் சேவை பயணத்தில் பல்லாண்டுகளாக மக்கள் மத்தியில்தான் வாழ்ந்து வந்தேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் குஜராத் முதல் மந்திரி எனும் ஒரு புதிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.

    பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு அரசின் தலைவராக பிரதமர் மோடி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஒரு சுயசார்பு இந்தியாவுக்காக உழைக்கும் முதன்மை ஊழியர் என தன்னை அடிக்கடி அவர் கூறுவார் என பதிவிட்டுள்ளது.

    20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக  ‘சி.எம் டூ பி.எம்’ என்னும் ஹாஷ்டேக்  டுவிட்டரில் டிரெண்ட்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×