search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது

    நாட்டில் இப்போது 58 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர், 18 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களும் செலுத்தி உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83 நாட்கள் ஆனது. அதன்பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது.

    இதனால் 2-வது 10 கோடி தடுப்பூசி 45 நாட்களிலும், 3-வது 10 கோடி தடுப்பூசி 29 நாட்களிலும், 4-வது 10 கோடி  24 நாட்களிலும், 5-வது 10 கோடி தடுப்பூசி 20 நாட்களிலும் எட்டிப்பிடித்து ஆகஸ்ட் 7ம்தேதி 50 கோடி என்ற நிலையை எட்டியது. செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 25ம் தேதி 60 கோடியை கடந்தது. 

    இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 72 கோடியை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் (மாலை 7 மணி வரை) 59 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. நாட்டில் இப்போது 58 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் செலுத்தி உள்ளனர், 18 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களும் செலுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. மே மாதத்தில் தினசரி சராசரியாக 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினசரி 78 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
    Next Story
    ×