search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    இப்போதுதான் புரிந்தது... ஜிடிபி உயர்வு என்றால் கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வு- ராகுல் விளாசல்

    கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மோடி ஆட்சியில் ஜிடிபி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்ல... ‘கேஸ், டீசல், பெட்ரோல்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
     விமர்சித்துள்ளார்.

    பிரதமர் மோடி

    ‘பாஜக ஆட்சியில் ஜிடிபி உயர்ந்து வருவதாக பிரதமர் மோடியும், மத்திய நிதி மந்திரியும் கூறிவருகின்றனர். பிரதமர், நிதி மந்திரி குறிப்பிடும் ஜிடிபி உயர்வு என்பது கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வுதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஜிடிபி என குறிப்பிடுகிறார்கள் என்று கருதினேன். ஜிடிபி என பிரதமர், நிதி மந்திரி குறிப்பிட்டது கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வு என்பது பின்னர்தான் புரிந்தது’ என ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது? பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014க்குப் பிறகு பெட்ரோல் 42 சதவீதம், டீசல் 55 சதவீதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? ஒருபக்கம் பணமதிப்பிழப்பையும், மறுபக்கம் பணமாக்குதல் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் நான்கைந்து நண்பர்களுக்கே பலன் அளிக்கின்றன.

    விவசாயிகள், தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின்மூலம் மத்திய பாஜக அரசு இதுவரை என்ன முன்னேற்றத்தை கண்டுள்ளது? எரிபொருள் விலை உயர்வுக்கு தற்போதைய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். 1991 போன்று 2021ல் கடும்  பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.

    Next Story
    ×