search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கத்தி முனையில் 30 வயது அதிகாரியை மிரட்டி திருமணம் செய்த 50 வயது பெண்

    மத்திய பிரதேச மாநிலத்தில் வேளாண் அலுவலகத்தில் பணிபுரியும் 30 வயது வாலிபரை 50 வயதுடைய பெண் கடத்தி திருமணம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வேளாண் துறையில் ரின்கேஷ் என்ற 30 வயது ஊழியர் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் சமீபத்தில் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்தார். அவர் தனது மனுவில் கூறி இருந்ததாவது:-

    ஜபல்பூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் நான் பணிபுரிந்து வருகிறேன். அந்த அலுவலகத்தில் 50 வயதுடைய கோகிலா என்ற பெண்ணும் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி அவர் என்னை மிரட்டி ஒரு காரில் கடத்தி சென்றார். அவருக்கு உதவியாக 3 பேர் இருந்தனர்.

    கோல்காபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்தனர். அங்கு எனக்கு மயக்க மருந்து கொடுத்து மிரட்டினார்கள். ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் மிரட்டினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

    மறுநாள் என்னை அரைகுறை மயக்கத்தில் அருகில் உள்ள ஒரு ஆலயத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண் என்னை கத்தியை காட்டி மிரட்டினார். தாலி கட்டாவிட்டால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று அச்சுறுத்தினார்.

    பயந்து போன நான் அந்த பெண்ணுக்கு தாலி கட்டினேன்.

    ஜூன் 17-ந் தேதி அந்த பெண் தூங்கி கொண்டிருந்த போது நான் தப்பி வந்து விட்டேன். ஜபல்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இது குறித்து நான் புகார் செய்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவர் கடத்தலுக்கான ஆதாரம் கேட்டார். ஜபல்பூர் போலீஸ் நிலையம் முன்புதான் நான் கடத்தப்பட்டேன். எனவே அந்த காவல்நிலைய கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்யும் படி கூறினேன். ஆனால் காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்தன.

    எனவே அந்த பெண்ணிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

    அவர் மனுவை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஜபல்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×