search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவை தொடர்ந்து மேலும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு

    கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 190, கேரளாவில் 128, ஒடிசாவில் 65 பேர் உள்பட நேற்று 555 பேர் இறந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பாதிப்பு 43,689, 43,509 என்ற அளவில் இருந்தது. நேற்று 44 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 7-ந் தேதி பாதிப்பு 43,733 ஆக இருந்தது. அதன் பிறகு 22 நாட்களில் இல்லாத அளவில் நேற்று தொற்று அதிகரித்துள்ளது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 22,064 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு தொடர்ந்து 3-வது நாளாக பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மகாராஷ்டிராவில் 7,242 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்ச பாதிப்பு ஆகும்.

    கர்நாடகாவில் 19 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு புதிதாக 2,052 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,531 ஆக இருந்த நிலையில் நேற்று 34 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 68 நாட்களாக பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்தது. முந்தைய நாள் பாதிப்பு 1,756 ஆக இருந்த நிலையில் நேற்று 1,859 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதேபோல அசாமில் 1,299, மணிப்பூரில் 1,000, மேகாலயாவில் 731 பேர் என சில வடகிழக்கு மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 190, கேரளாவில் 128, ஒடிசாவில் 65 பேர் உள்பட நேற்று 555 பேர் இறந்துள்ளனர்.

    இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,23,217 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,32,335 பேர் அடங்குவர்.

    கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 42,360 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 ஆக உயர்ந்தது.

    தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,05,155 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு நேற்று முன்தினத்தை விட 1,315 அதிகம் ஆகும்.

    கோப்புப்படம்


    இந்தியாவில் இதுவரை 45.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் 35.61 கோடி பேருக்கு முதல் டோசும், 9.98 கோடி பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டுள்ளது.

    இதில் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51,83,180 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று 18,16,277 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 46.46 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×